சேலம்: சேலம் தாரமங்கலத்தில் பெருமாள் கோயிலில் 7 சிலைகளை திருடிய சாமியார் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், கடந்த 20ம் தேதி மாலை பூசாரி குமரவேல் பூஜை செய்து விட்டு நடையை சாத்தினார். பின்னர், அடுத்தநாள் காலையில் கோயிலுக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. உள்ளே இருந்த பெருமாள் சிலை 1, பூதேவி சிலை 2, தேவி சிலை 2, ஆஞ்சநேயர் சிலை 1, குழந்தை கிருஷ்ணர் சிலை 1 என மொத்தம் 7 சிலைகள் திருட்டு போயிருந்தது. இதுபற்றி கோயில் தர்மகர்த்தா இனியன் அளித்த புகாரின் பேரில், தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர்.
கோயில் பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்ததில், கோயில் பூட்டை உடைத்து 7 சிலைகளையும் திருடிச் சென்றது பெரியசோரகையை சேர்ந்த சாமியார் சக்திவேல் (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார், சக்திவேலை அதிரடியாக கைது செய்தனர்.
அவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமாள் சிலை உள்ளிட்ட 7 சிலைகளையும் மீட்டனர். விசாரணையில் அவர், அந்த பகுதியில் உள்ள கோயிலில் பூசாரியாகவும், காவி வேஷ்டி கட்டிக்கொண்டு சாமியாராக குறி சொல்வதுமாக இருந்துள்ளார். தனது வீட்டில் பூஜை நடத்தி குறி சொல்ல, வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்த 7 சிலைகளையும் திருடி வந்தது தெரிந்தது. இதையடுத்து கைதான சாமியார் சக்திவேலை, ஓமலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.
The post பெருமாள் கோயிலில் 7 சிலைகளை திருடிய சாமியார் அதிரடி கைது appeared first on Dinakaran.