×

திருச்சுழி அருகே மேலையூர் கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிலை கண்டெடுப்பு

திருச்சுழி : திருச்சுழி அருகே மேலையூர் கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.திருச்சுழி மேலையூர் கிராமத்தில் ஒரு பழமையான விநாயகர் சிற்பம் இருப்பதாக அவ்வூரைச் சேர்ந்த ஜோதிலிங்க கருப்பசாமி கொடுத்த தகவலின் படி தேவாங்கர் கலைக் கல்லூரி வரலாற்று துறை உதவி பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய கள ஆய்வாளர் ரமேஷ் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர்களான தர் மற்றும் முனைவர். தாமரைக்கண்ணன் ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த சிற்பம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பம் என்பது தெரிய வந்தது. மேலும் சிற்பம் குறித்து அவர்கள் கூறுகையில், பொதுவாக தமிழகத்தின் பாண்டிய தேசங்களில் தொடர்ந்து அவர்களின் ஆட்சியின் போது எண்ணற்ற கோயில் திருப்பணிகள் செய்திருக்கின்றனர் என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக சிற்பங்களும் கல்லெழுத்துக்களும் கிடைத்து வருகின்றன. அவற்றில் தற்போது நாங்கள் கண்டறிந்த சிற்பமும் பாண்டியர்களின் திருப்பணியில் உருவானவையே.

இந்த சிற்பம் இரண்டரை அடி உயரம் கொண்ட ஒரு பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. நான்கு கரங்களில் வலது மேற்கரத்தில் மழுவும் இடது மேற்கரத்தில் பாசம் என்ற ஆயுதத்தையும் தாங்கிய படியும் முன்னிரு கரங்களும் சிதைந்த நிலையில் காணப்படுகிறது. தலையில் மகுடம் தரித்தும் புஜங்களில் ஆபரணங்கள் அணிந்தும் துதிக்கையானது மோதகத்துடனும் சிற்பம் முற்கால பாண்டியர்களுக்கே உரித்தான கலைநயத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தை பார்க்கும்போது இப்பகுதியில் பெரிய முற்கால பாண்டியரின் சிவன் கோயில் இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவை கால ஓட்டத்திலோ அல்லது அந்நிய படையெடுப்பினாலோ அளித்திருக்கலாம்’’ என்றனர்.

The post திருச்சுழி அருகே மேலையூர் கிராமத்தில் முற்கால பாண்டியர் காலத்து விநாயகர் சிலை கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Tags : Ganesha ,Melaiyur village ,Thiruchuzhi ,
× RELATED திருவள்ளூர் அடுத்த மப்பேடு அருகே கோயில் காவலாளி அடித்துக் கொலை