×

நீலகிரி மாவட்டத்தில் மின் நிலையங்களில் நடப்பாண்டில் உற்பத்தி பாதிக்க வாய்ப்பு இல்லை-அதிகாரிகள் நம்பிக்கை

மஞ்சூர் : தொடர் மழையால் மாவட்டத்தில் உள்ள அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருவதை தொடர்ந்து மின் நிலையங்களில் நடப்பாண்டில் உற்பத்தி பாதிக்காது என அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு, பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 175 மெகாவாட், பரளி மின் நிலையத்தில் 180 மெகாவாட், பில்லுார் மின்நிலையத்தில் 100 மெகாவாட், அவலாஞ்சி மின் நிலையத்தில் 40 மெகாவாட், காட்டுகுப்பை மின்நிலையத்தில் 30 மெகாவாட், சிங்காரா மின் நிலையத்தில் 150 மெகாவாட், பைக்காரா மின்நிலையத்தில் 59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ மின்நிலையத்தில் 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ மின்நிலையத்தில் 0.70 மெகாவாட், மாயார் மின்நிலையத்தில் 36 மெகாவாட், மரவகண்டி மின்நிலையத்தில் 0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளவையாக உள்ளது.

மாநிலத்தில் மொத்த மின் உற்பத்தியில் 10 சதவீதம் மின்சாரம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின்நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின் தேவை அதிகமாக உள்ள ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களின் மின் தேவையை மேற்படி நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின் மின் நிலையங்களில் இருந்து ெவளியேற்றப்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன் கோவை, ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப்படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது.

இந்நிலையில் கடந்த நவம்பரில் துவங்கி 5 மாதங்களாக மழை அறவே பெய்யவில்லை. பனி, உறைபனி, அதை தொடர்ந்து கடுமையான வெயில் என வறட்சியின் தாக்கம் அதிகரித்தது. இதனால் நீர் வரத்தின்றி ஆறுகள், சிற்றோடைகள் அனைத்தும் வறண்டு போகும் சூழல் ஏற்பட்டது. நீர் வரத்து பெருமளவு குறைந்ததால் மின்சார உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள அப்பர்பவானி, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பெரும்பாலான அணைகளிலும் நீர் மட்டம் பெருமளவு குறைந்து போனது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.

அவ்வப்போது பலத்த மழையும் தொடர்கிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அணைகளுக்கும் நீர் வரத்து அதிகரித்து அணைகளில் நீர் மட்டம் மள, மளவென உயர்ந்து வருகிறது. மேலும் பருவ மழை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுவதால் மின் நிலையங்களில் மின்சார உற்பத்தி எவ்விதத்திலும் பாதிக்காது என மின்வாரிய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

The post நீலகிரி மாவட்டத்தில் மின் நிலையங்களில் நடப்பாண்டில் உற்பத்தி பாதிக்க வாய்ப்பு இல்லை-அதிகாரிகள் நம்பிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,Dinakaran ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்