×

2ம் நிலை காவலர் பணிக்கு தேர்வான 117 பேருக்கு பணி நியமன ஆணை

*திருவண்ணாமலை எஸ்பி வழங்கினார்

திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாவட்டத்தில் 2ம் நிலை காவலர் பணிக்கு தேர்வான 117 பேருக்கு பணி நியமன ஆணைகளை எஸ்பி கார்த்திகேயன் வழங்கினார்.
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல்துறை, தீயணைப்புத்துறை, சிறைத்துறைகளில் காலியாக உள்ள 3,552 2ம் நிலை காவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி தேர்வு கடந்த நவம்பரில் தமிழ்நாடு முழுவதும் நடந்தது. 10ம் வகுப்பு கல்வி தகுதியை அடிப்படையாக கொண்டு நடைபெற்ற இத்தேர்வில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 9,719 ஆண்கள், 2,559 பெண்கள் உள்பட மொத்தம் 12,278 பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து, பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியல் வெளியானது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 77 ஆண்கள், 40 பெண்கள் உள்ளிட்ட 117 2ம் நிலை காவலர்கள் பணி நியமனம் செய்ய தேர்வு செய்யப்பட்டனர். அதையொட்டி, 2ம் நிலை காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணையை நேற்று திருவண்ணாமலை எஸ்பி அலுவலகத்தில் எஸ்பி கார்த்திகேயன் வழங்கினார். அப்போது, சீருடை பணியில் ஈடுபாடுடனும், அர்ப்பணிப்புடனும் செயல்பட வேண்டும்.

நேர்மையும், மக்கள் மீதான அக்கறையும் அவசியம். ஆரம்ப நிலையில் இருந்தே அதனை கடைபிடிக்க வேண்டும் என எஸ்பி அறிவுறுத்தினார்.அப்போது, 3 வயது குழந்தையுடன் பணி நியமன ஆணையை பெற்ற பெண் காவலருக்கு எஸ்பி கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்தார். நிகழ்ச்சியில் ஏடிஎஸ்பிக்கள் பழனி, ஸ்டீபன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தயாளன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post 2ம் நிலை காவலர் பணிக்கு தேர்வான 117 பேருக்கு பணி நியமன ஆணை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai ,Dinakaran ,
× RELATED தேர்தல் பிரசாரம் நாளையுடன் ஓய்கிறது *...