×

அணை திறப்பை எதிர்நோக்கி வயல்களில் பொடி விதைப்பு முறையில் கன்னிப்பூ சாகுபடி

நாகர்கோவில் : அணை திறப்பை எதிர்நோக்கி வயல்களில் பொடி விதைப்பு முறையில் விவசாயிகள் கன்னிப்பூ சாகுபடி செய்து வருகின்றனர்.
குமரி மாவட்டத்தில் இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. சுமார் 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடிக்கு அனைத்து விவசாயிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

குளத்துபாசன வசதி பெறும் வயல்களில், பிற பகுதியில் சாகுபடி பணி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே சாகுபடி தொடங்கி விடும். தற்போது பறக்கை பகுதியில் சாகுபடி பணி முழுவதும் முடிந்துள்ளது. தொடர்ந்து சுசீந்திரம் பெரிய குளத்தை நம்பி பாசன வசதி பெறும் வயல்களில் நடவு பணி முடிந்துள்ளது. ஆற்றுப்பாசன வசதி பெறும் வயல்களில் அணையில் இருந்து தண்ணீர் திறந்தபிறகு நடவு பணிகள் தொடங்கும்.

இதனால் நாற்றங்கால் தயாரிக்கும் பணி கடந்த 20 நாட்களுக்கு முன்பு நடந்தது. நாற்றங்கால் தயாரிக்க போதிய அளவு தண்ணீர் இல்லாத காரணத்தால், ஆற்றுபாசன வசதி பெறும் பகுதி முழுவதும் பொடிவிதைப்பில் நாற்றங்கால் தயாரிக்கும் பணி நடந்தது. ஜூன் 1ம் தேதி பேச்சிப்பாறை அணை விவசாயத்திற்கு திறக்கும்போது நாற்றங்காலில் இருந்து நாற்றை எடுத்து, நடவு செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் நாற்றங்கால் தயார் செய்யாத வயல்களில் பேச்சிப்பாறை தண்ணீர் திறப்பை எதிர்நோக்கி, தற்போது பொடிவிதைப்பு மூலம் நெல்சாகுபடி நடந்து வருகிறது.
குறிப்பாக வீரநாராயணமங்கலம், தாழக்குடி, திருப்பதிசாரம், வெள்ளமடம் பகுதியில் உள்ள பல ஏக்கர் நிலப்பரப்பில் டிராக்டர் கொண்டு உழுது பொடிவிதைப்பு மூலம் நெல்சாகுபடியை விவசாயிகள் செய்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது: குமரி மாவட்டத்தில் குளத்து பாசனம், ஆற்றுபாசனம் மூலம் விளைநிலங்கள் பயன் அடைந்து வருகிறது. குளத்து பாசனத்தை நம்பி நெல்சாகுபடி செய்யும் வயல்பரப்புகளில் தண்ணீர் நிரப்பி உழுது, நாற்றங்கால் தயாரித்து நடவு செய்யப்படும்.

இதுபோல் ஆற்றுபாசன வசதி பெறும் வயல்பரப்புகளில் தண்ணீர் இருக்கும் நிலையில் உழுது தொழி விதைப்பு மூலம் நாற்றங்கால் தயாரித்து, தண்ணீர் வந்தவுடன் நடவு பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால் பல பகுதிகளில் தற்போது தண்ணீர் இல்லாததால், வயல்களில் பொடி விதைப்பு மூலம் சாகுபடி பணி நடக்கிறது. வருடம் தோறும் ஜூன் 1ம் தேதி பேச்சிப்பாறை அணை திறக்கப்படும். அப்படி அணை திறக்கும் போது பொடி விதைப்பு மூலம் சாகுபடி செய்யப்பட்ட வயல்களுக்கு தண்ணீர் கிடைக்கும். அதன்மூலம் பயிர்கள் செழித்து வளரும் என தெரிவித்தனர்.

The post அணை திறப்பை எதிர்நோக்கி வயல்களில் பொடி விதைப்பு முறையில் கன்னிப்பூ சாகுபடி appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Kumari ,Dinakaran ,
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...