×

தர்மலிங்கபுரம் சாலையில் உள்ள பேரிகார்டை நிரந்தரமாக அகற்ற கோரிக்கை

தேவதானப்பட்டி, மே 27: தேவதானப்பட்டி அருகே தர்மலிங்கபுரத்தில் சாலையில் உள்ள வேகத்தடுப்பு பேரிகார்டை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல்-குமுளி தேசிய நெடுஞ்சாலை, தேனி மாவட்டத்தில் காட்ரோடு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் வழியாக குமுளி செல்கிறது. இதில் தேவதானப்பட்டியை அடுத்து தர்மலிங்கபுரம் என்ற கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. இந்த இடத்தில் லேசான வளைவு உள்ளது. இந்த வளைவில் ஒரு சில நேரங்களில் அதிகவேகமாக வரும் சரக்கு வாகனங்கள் சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு வந்தது.

இந்த விபத்துக்களில் உயிர் பலிகள் பல ஏற்பட்டது. இந்நிலையில் அந்த வளைவில் வேகத்தடுப்பு பேரிகார்டை போலீசார் வைத்துள்ளனர். இதனால் வேகமாக வரும் வாகனங்கள் நின்று பின்னர் அந்த இடத்தை கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனால் இந்த வேகத்தடுப்பு பேரிகார்டு சில நேரங்களில் பெரிய விபத்துகளை ஏற்படுத்தி உயிர்பலி வாங்கி வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் இந்த வேகத்தடுப்பு பேரிகார்டில் மோதி 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு, உயிர் பலிகள் ஏற்பட்டுள்ளது.

கடந்த நான்கு நாட்களுக்கு இரவு 1.45 மணிக்கு தேனியில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற டூவிலரும், திருப்பூரில் இருந்து போடி சென்ற வேனும் இந்த இடத்தில் எதிர் எதிர் திசையில் யார் முந்திச்செல்வது என்ற போட்டியில் ஒருவரை ஒருவர் முந்திச்செல்ல நினைத்து நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் பலியானார். இரண்டு பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்த வேகத்தடுப்பு பேரிகார்டால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் நிரந்தரமாக இதை அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post தர்மலிங்கபுரம் சாலையில் உள்ள பேரிகார்டை நிரந்தரமாக அகற்ற கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Dharmalingapuram road ,Devadanapatti ,Dharmalingapuram ,Dinakaran ,
× RELATED கோயில் செயல் அலுவலரை தாக்கியவர் மீது வழக்கு