×

ஓராண்டாக சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரம் ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: பணமோசடி வழக்கில் கடந்த ஓராண்டாக திகார் சிறையில் இருக்கும் டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயினுக்கு உச்ச நீதிமன்றம் நேற்று ஆறு வாரம் காலம் நிபந்தனையுடன் கூடிய ஜாமீனை வழங்கி உத்தரவிட்டுள்ளது. டெல்லி சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தவர் சத்யேந்திர ஜெயின். இதில் அவரும், அவரது குடும்பத்தினரும் கடந்த 2017ம் ஆண்டு ரூ1.62கோடி வரை பணமோசடி செய்ததாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த நிலையில் கொல்கத்தாவை சேர்ந்த நிறுவனத்தின் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பான வழக்கில் சத்யேந்திர ஜெயின் கடந்த ஆண்டு மே மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவர் தற்போது வரையில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்த வழக்கில் இருந்து ஜாமீன் வழங்க வேண்டும் என சத்யேந்திர ஜெயின் தொடர்ந்த அனைத்து மனுக்களையும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு சத்யேந்திர ஜெயின் மனு செய்தார். இந்த வழக்கு உச்ச நீதிமன்ற கோடைக்கால அமர்வு நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அப்ஷேக் மனு சிங்வி,‘‘சத்யேந்திர ஜெயின் கடந்த சில மாதங்களாக மிகவும் உடல்நலம் பாதிப்படைந்துள்ளார். அவரது உடல் எடை சுமார் 35கிலோ அளவுக்கு குறைந்து விட்டது.

அதனால் அவரது உடல் நலத்தை அடிப்படையாகக் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அதிகாரிகளை பார்க்கும் போது மட்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது போன்று பாவனை காட்டுகிறார் என கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,‘‘இந்த விவகாரத்தில் சத்தியேந்திர ஜெயினுக்கு ஆறு வாரம் அதாவது ஜுலை 11ம் தேதி வரையில் அவரது உடல்நல பிரச்சனைகளை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். அவர் ஊடகங்களை அணுக கூடாது என்று நிபந்தனை விதித்தனர்.

The post ஓராண்டாக சிறையில் இருக்கும் சத்யேந்திர ஜெயினுக்கு 6 வாரம் ஜாமீன்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Satyendra Jain ,Supreme Court ,New Delhi ,Delhi ,Minister ,Tihar Jail ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு