×

10 நாளில் செந்தில் பாலாஜி விளைவுகளை சந்திப்பார் என அண்ணாமலை மிரட்டியதற்கு பின் ரெய்டு நடப்பது சந்தேகத்தை வலுவாக்குகிறது: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு

சென்னை: திட்டமிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படுத்த சதி நடப்பதாகவும், எத்தனை ரெய்டு நடத்தினாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டோம் என்றும் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கும், ஜப்பானுக்கும் சென்று முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்து வருகிறார். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவிற்குத் தொழில் புரட்சியை ஏற்படுத்துவதற்கு மு.க.ஸ்டாலினுடைய முயற்சிகள் – நாள்தோறும் பத்திரிகைகளின் வாயிலாக மக்கள் மத்தியில் போய்ச் சேருகிறது.இதை திசை திருப்புவதற்கு, ரெய்டை நடத்தியிருக்கின்றார்கள்.

10 நாள்களுக்கு முன்பு அண்ணாமலை கர்நாடகத் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துவிட்டு, தமிழ்நாட்டிற்கு வந்து தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள ஒரு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் இன்னும் 10 நாள்களில் செந்தில்பாலாஜி விளைவுகளை சந்திப்பார் என்று பகிரங்கமாக சொன்னார். இப்பொழுது பிசியாக இருக்கிறோம்; அந்தப் பிசி முடிந்ததும் செந்தில்பாலாஜிக்கு ரெய்டு விடுவோம் என்று பகிரங்கமாக அன்றும் அண்ணாமலை சொன்னார். உள்ளாட்சி மன்றத் தேர்தலில் நூற்றுக்கு நூறு கோவை மாவட்டத்திலும், கரூர் மாவட்டத்திலும் திமுக வெற்றி பெற்றது. ஆகவே, செந்தில்பாலாஜியை முடக்கவேண்டும் என்பதற்காக இப்படிப்பட்ட காரியங்களை அண்ணாமலை திட்டமிட்டு செய்திருக்கிறார். திட்டமிட்டே, செந்தில்பாலாஜிக்கு வேண்டப்பட்டவர்களின் வீடுகளில் எல்லாம் ரெய்டு நடத்தியிருக்கிறார்கள்.

தமிழ்நாடு காவல்துறைக்குத் தகவல் இல்லை என்று காவல்துறை அதிகாரியே சொல்கிறார். இரவில் வந்தால், அவர்கள் கொள்ளையடிக்க வருகிறார்களா, திருடுவதற்காக வருகிறார்களா, கொலை செய்வதற்காக வருகிறார்களா என்று சந்தேகப்படுவது நியாயமானதுதானே. அதுபோன்று, தற்காப்புக்கு சில செயல்கள் நடந்திருக்கலாம். இந்தத் தகவல் தெரிந்தவுடன், அங்கே திமுகவைச் சேர்ந்தவர்கள் யாரும் இருக்கக்கூடாது என்று சொன்னேன். உடனடியாக அவர்கள் கலைந்து சென்றார்கள். திட்டமிட்டு சட்டம் ஒழுங்குப் பிரச்னையை ஏற்படுத்தவேண்டும் என்பதுதான்.

வருமான வரித் துறை அதிகாரிகளை அடித்தார்கள் என்கிற செய்தியைப் போட்டு, அதை ஒரு காரணமாக வைத்து, திமுக அரசின்மீது களங்கம் சுமத்தலாம் என்று நினைக்கிறார்கள். அண்ணாமலை சொன்ன பிறகு செய்கிறீர்கள் என்றால், அண்ணாமலை என்ன சி.பி.ஐ. இயக்குநரா, வருமான வரித் துறை இயக்குநரா, யார் அவர். அதனால் தான் சந்தேகம் வருகிறது. இரண்டு மாவட்டங்கள் அதிமுகவினுடைய கோட்டையாக இருந்ததை உடைத்துக் காட்டி, அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளாட்சி மன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற வழிவகுத்தார் என்பது தான் இதற்கு காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

The post 10 நாளில் செந்தில் பாலாஜி விளைவுகளை சந்திப்பார் என அண்ணாமலை மிரட்டியதற்கு பின் ரெய்டு நடப்பது சந்தேகத்தை வலுவாக்குகிறது: ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Raid ,Annamalai ,Senthil Balaji ,RS Bharati ,Chennai ,
× RELATED சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட...