×

காலாவதியான தின்பண்டம் விற்பனை மஞ்சூரில் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு

*குந்தா தாசில்தார் தலைமையில் நடவடிக்கை

மஞ்சூர் : மஞ்சூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் காலாவதியான தின்பண்டங்கள் வைத்திருந்தது தொடர்பாக 3 கடைகளுக்கு அதிரடியாக குந்தா தாசில்தார் தலைமையில் குழுவினர் சீல் வைத்தனர்.நீலகிரி மாவட்டத்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர்கள் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குந்தா தாசில்தார் இந்திரா தலைமையில் துணை தாசில்தார் நந்தகோபால், வட்ட வழங்கல் அலுவலர் வேடியப்பன், குந்தா வருவாய் ஆய்வாளர் மணிமேகலை, கிராம நிர்வாக அலுவலர் தினேஷ்குமார் மற்றும் வருவாய்த்துறையினர் மஞ்சூர் பஜார் பகுதியில் உள்ள பெட்டிகடைகள், மளிகை கடைகள், ேஹாட்டல், பேக்கரி, டீ கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மறைத்து வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது.

மேலும் சில கடைகளில் காலாவதியான பொருட்கள் மற்றும் உணவு பாக்கெட்டுகளில் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாமலும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தாசில்தார் இந்திரா முன்னிலையில் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் ஒரு கடைக்கு ரூ.9 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட கடைகளுக்கு வருவாய்த்துறையினர் அபராதம் விதித்தனர்.

இதுகுறித்து தாசில்தார் இந்திரா கூறுகையில், ‘‘மாவட்ட கலெக்டரின் அறிவுறுத்தல் பேரில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களின் தயாரிப்பு, விற்பனை மற்றும் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே கேரி பேக்குகள், டிஸ்போசல் டம்ளர் மற்றும் தட்டுகள் உள்ளிட்ட அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிப்பதும், விற்பனை செய்வதும் மற்றும் உபயோகிப்பதும் குற்றமாகும்.

இந்த தடையை மீறி கேரி பேக்குகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களை இருப்பு வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது அபராதம் விதிப்பதுடன் கடைகளுக்கு சீல் வைக்கப்படும். இதேபோல உணவு பொருட்கள் பாக்கெட்டுகளின் மீது கட்டாயம் உற்பத்தி மற்றும் காலாவதி தேதி குறிப்பிட்டிருக்க வேண்டும். காலாவதியான பொருட்களை உடனுக்குடன் அப்புறப்படுத்தி அதை அழிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

The post காலாவதியான தின்பண்டம் விற்பனை மஞ்சூரில் 3 கடைகளுக்கு ‘சீல்’ வைப்பு appeared first on Dinakaran.

Tags : Manjur ,Gunda Dasildar Manjur ,Manchur ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...