×

துவக்கமே அமர்க்களம்..மடாதிபதிகள் உள்ளே, குடியரசு தலைவர் வெளியே : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து

சென்னை : புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். டெல்லியில் அமைந்துள்ள நாடாளுமன்ற கட்டிடம் 96 ஆண்டுகள் பழமையானது. அதனால், புதிய நாடாளுமன்றம் கட்ட ஒன்றிய அரசு முடிவு செய்தது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 10ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புதிய நாடாளுமன்ற திறப்பு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. ரூ.1250 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார்.

ஆனால், நாட்டின் முதல் குடிமகன் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்முதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறந்து வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இதற்கிடையே நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழா அழைப்பிதழ் அனைத்து எம்.பி.க்களுக்கும் அனுப்பப்பட்டது. அதில், பிரதமர் மோடியே திறந்து வைப்பார் என்று அச்சிடப்பட்டு இருந்தது. அதோடு, அழைப்பிதழில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் பெயரே இடம் பெறவில்லை. விழாவுக்கும் ஜனாதிபதி அழைக்கப்படவில்லை என்று செய்திகள் வெளியானது. இதையடுத்து, புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை புறக்கணிக்கப்போவதாக காங்கிரஸ் உட்பட 20 கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்த நிலையில், புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்பு குறித்து மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில், இப்பொழுதிருக்கும் நாடாளுமன்ற கட்டிடத்தைத் தான் மியூசியம் ஆக்கப்போவதாக சொன்னார்கள். ஆனால் மியூசியத்தில் இருக்கும் பொருளை புதிய கட்டிடத்தில் கொண்டுவந்து வைக்கிறார்கள். துவக்கமே அமர்க்களம். மடாதிபதிகள் உள்ளே, குடியரசுத்தலைவர் வெளியே…இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post துவக்கமே அமர்க்களம்..மடாதிபதிகள் உள்ளே, குடியரசு தலைவர் வெளியே : மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கருத்து appeared first on Dinakaran.

Tags : President of the Republic ,Madurai ,GP SV ,Venkatesan ,Chennai ,GP ,SV ,Aargalam ,
× RELATED உலக ஹோமியோபதி தினத்தை முன்னிட்டு...