×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மின்னொளியில் ஜொலித்த தெப்பம்

திருவாரூர், மே 26: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியதையடுத்து மின்னொளியில் ஜொலித்தவாறு தெப்பம் கமலாலய குளத்தின் 4 கரைகளையும் சுற்றி வந்தது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவசமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும் , சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது.

மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும்,உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர்.கோயில் 5 வேலி,குளம் 5 வேலி,ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேராகும். கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் இருந்து வரும் கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைப்பெறுவது வழக்கம். இந்நிலையில் நடப்பாண்டில் பங்குனி உத்திர விழா துவக்கத்திற்காக மஹாதுவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த மார்ச் மாதம் 9ந் தேதி நடைபெற்ற நிலையில் கடந்த மாதம் 1ம் தேதி ஆழித்தேரோட்ட விழாவானது நடைபெற்றது. இந்நிலையில் தெப்ப திருவிழாவானது நேற்று துவங்கியது. இரவு 9 மணியளவில் இசை கச்சேரிகளுடன் தெப்ப திருவிழா துவங்கிய நிலையில் முன்னதாக அருள்மிகு பார்வதி கல்யாணசுந்தரர் தெப்பத்தில் எழுந்தருளும் நிகழச்சி நடைபெற்றது.

இதனையடுத்து இந்த தெப்ப குளத்தின் கீழ்கரையிலிருந்து புறப்பட்ட தெப்பமானது தொடர்ந்து தென்கரை, மேல்கரை மற்றும் வடகரை வழியாக மீண்டும் கீழ்கரையை வந்தடைந்த நிலையில் குளத்தின் 4 புறங்களிலும் அலங்கார மின்விளக்குகள் மட்டுமின்றி தெப்பம் மின்ஓளியில் ஜொலித்ததை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டுகளித்தனர். இதில் கலெக்டர் சாரு, எம்.எல்.ஏ பூண்டிகலைவாணன், நகராட்சி தலைவர் புவனப்பிரியாசெந்தில், துணை தலைவர் அகிலாசந்திரசேகர், ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா, மாவட்ட ஊராட்சி துணை தலைவர் கலியபெருமாள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் நாள் ஒன்றுக்கு 3 சுற்றுகள் வீதம் நடைபெறும் இவ்விழாவானது 2வது நாளாக இன்றும், 3வது நாளாக நாளையும் நடைபெறுகிறது. மேலும் இதற்கான ஏற்பாடுகளை கோயிலின் உள்துறை கட்டளை பரம்பரை அறங்காவலர் ராம்தியாகராஜன், உதவி ஆணையர் ராணி, செயல் அலுவலர் அழிகியமணாளன் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் செய்துள்ள நிலையில் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியிலும் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் திருவாரூர் நகராட்சி சார்பில் விழாவிற்கு வரும் பொது மக்கள் மற்றும் பக்தர்கள் நலன் கருதி தற்காலிய கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிபடை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

400 பேர் அமரும் வகையில் உருவாக்கம் நாள் ஒன்றுக்கு இரவு 3 சுற்றுகள் வீதம் இரவு 7 மணியளவில் துவங்கி மறுநாள் காலை 6 மணி வரையில் கண்ணை ஜொலிக்கும் மின்னொளியில் இந்த தெப்ப திருவிழா நடைபெறுவது வழக்கம். மேலும் இரும்பு பேரல்கள், மூங்கில் மற்றும் பலகை கொண்டு தெப்பம் உருவாக்கப்படும் நிலையில் இதற்காக 432 டின் பேரல்களில் ஒரு அடுக்குக்கு 216 பேரல்கள் வீதம் 2 அடுக்குகளாக 7 அடி உயரத்திலும் 2 ஆயிரத்து 500 சதுர அடி அகலத்திலும் சுமார் 400 பேர் அமர்ந்து செல்லும் வகையில் இந்த தெப்பமானது உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் மின்னொளியில் ஜொலித்த தெப்பம் appeared first on Dinakaran.

Tags : Thiagaraja Swamy temple ,Tiruvarur ,Theppam festival ,Thiravarur Thyagaraja Swamy Temple ,Kamalalaya ,
× RELATED திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில்...