×

₹7 லட்சம் கடனை திருப்பி கேட்ட நர்சை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்: ஐதராபாத்தில் பயங்கரம்

திருமலை: தெலங்கானாவில் ₹7 லட்சம் கடனை திருப்பி கேட்டதால், நர்சை அடித்துக்கொன்று தலையை துண்டித்த காதலன், உடலை 6 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் வைத்திருந்த கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மலக்பேட் மூசி நதியில் கடந்த 17ம் தேதி ஒரு பெண்ணின் தலை மட்டும் தனியாக மிதந்து கொண்டிருந்தது. போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் சைதன்யபுரியை சேர்ந்த சந்திரமோகன்(48) என்பவர் ஆட்டோவில் வந்து, ஒரு பிளாஸ்டிக் பையை நதியில் வீசியது தெரிந்தது. அவரை பிடித்து விசாரித்தனர். அதில் திகலகுடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த அனுராதா(55) என்பவரை துண்டுதுண்டாக வெட்டி கொலை செய்து, தலையை நதியில் வீசியதை ஒப்புக்கொண்டார்.

இதுகுறித்து போலீசாரிடம் சந்திரமோகன் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:
எனது தந்தையை சிகிச்சைக்காக திகலகுடாவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அழைத்து செல்வேன். அப்போது அங்கு பணிபுரிந்த நர்ஸ் அனுராதாவுடன் பழக்கம் ஏற்பட்டது. அனுராதாவை அவரது கணவர் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், 15 ஆண்டுகளுக்கு முன் அனுராதாவுடன் நெருக்கமாக பழக தொடங்கினேன். ஒரு கட்டத்தில் எனக்கு சொந்தமான ஒரு வீட்டில் அவரை குடிவைத்தேன். அடிக்கடி அவரது வீட்டுக்கு சென்று வருவேன்.

அனுராதா பணத்தை வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வந்தார். அவரிடம் நான், ஆன்லைனில் வர்த்தகம் செய்வதற்காக ₹7லட்சத்தை வட்டிக்கு வாங்கினேன். ஆனால் பணத்தை திருப்பி ெகாடுக்காததால் தகராறு ஏற்பட்டது. கடந்த 12ம் தேதி மீண்டும் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரத்தில் அனுராதாவை அடித்துக்கொன்றேன். பின்னர் அவரது தலையை துண்டித்தேன். மேலும் அவரது உடலை 6 துண்டுகளாக வெட்டினேன். சில துண்டுகளை வீட்டில் உள்ள ப்ரிட்ஜில் வைத்தேன். சில துண்டுகளை பிளாஸ்டிக் கவரில் வைத்து வீட்டில் உள்ள குப்பை தொட்டியில் மறைத்து வைத்தேன். வீட்டில் துர்நாற்றம் வராமல் இருக்க கற்பூரம் மற்றும் வாசனை திரவியங்களை தெளித்தேன்.

பின்னர் 17ம் தேதி தலையை மட்டும் பையில் எடுத்து சென்று மூசி நதியில் வீசிவிட்டு சென்றுவிட்டேன். அனுராதாவின் மகள் மற்றும் உறவினர்களுக்கு சந்தேகம் வராமல் இருக்க அவரது செல்போனில் தினமும் மெசேஜ் அனுப்பி வந்தேன். இதனால் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. இருப்பினும் போலீசாரின் விசாரணையில் சிக்கிக்கொண்டேன். இவ்வாறு தெரிவித்தார்

The post ₹7 லட்சம் கடனை திருப்பி கேட்ட நர்சை கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜில் வைத்த காதலன்: ஐதராபாத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Hyderabad ,Tirumalai ,Telangana ,
× RELATED ஹைதராபாத்தில் ரசாயன தொழிற்சாலையில்...