×

அமுல் நிறுவன போட்டியை ஆவின் சமாளிக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

சென்னை: அமுல் நிறுவன போட்டியை ஆவின் சமாளிக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: குஜராத்தின் பால் நிறுவனமான அமுல் காஞ்சிபுரம், திருவள்ளுர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் தினமும் 30 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் என இலக்கு நிர்ணயித்து, அதற்காக சுய உதவிக் குழுக்களை உருவாக்கி வருகிறது. ஆவின் கொள்முதல் செய்யும் பாலுக்கு லிட்டருக்கு ரூ.32 முதல் ரூ.34 வரை மட்டுமே வழங்கப்படும் நிலையில், அமுல் நிறுவனம் லிட்டருக்கு ரூ.36 வரை வழங்குகிறது. தமிழ்நாட்டில் சந்தை பங்கை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ள அமுல் நிறுவனம், அதற்காக சென்னைக்கு மிக அருகில் உள்ள ஆந்திராவின் ஸ்ரீசிட்டி சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அமுல் பால் பதப்படுத்தும் ஆலையை அமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளது.

வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலும் பால் கொள்முதல் செய்ய அமுல் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. அமுல் நிறுவனத்தின் இந்த திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தால், கொள்முதலிலும், விற்பனையிலும் ஆவின் நிறுவனம் பெரும் பங்கை இழக்க நேரிடும்; அமுல் நிறுவனத்திடம் ஆவின் நிறுவனம் ஒருபோதும் வீழ்ந்து விடக் கூடாது. தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கு வெறும் 16% மட்டுமே.
இதை 50 விழுக்காடாக உயர்த்த வேண்டும். எனவே, பால் உற்பத்தியாளர்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.42, எருமைப்பாலுக்கு ரூ.51 என்ற விலை வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.  அத்துடன் கொள்முதல் மையங்களை அதிகரிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

The post அமுல் நிறுவன போட்டியை ஆவின் சமாளிக்க பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Avin ,Amul ,Anbumani ,CHENNAI ,Bamaka… ,Dinakaran ,
× RELATED “தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத்...