×

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலை அரங்கில் நாளை “TN Talk” நிகழ்ச்சி; அனுமதி இலவசம்..!!

சென்னை: அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலை அரங்கில், நாளை “TN Talk” நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023ம் ஆண்டிற்கான பள்ளிக்கல்வித் துறையின் மானியக் கோரிக்கையின் போது பள்ளிக்கல்வித்துறை அமைச்சரால், “அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒருங்கிணைப்பில் சர்வதேச அளவில் பல்துறை நிபுணர்கள், அறிவியல் ஆய்வாளர்கள் மற்றும் புகழ்பெற்ற அறிஞர்களின் உரைகள் மிகச்சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அரங்க அமைப்புடன் TN talk என்ற பெயரில் நிகழ்த்தப்படும்.

இணையம் வாயிலாக உலகெங்கும் உள்ள தமிழர்களைச் சென்றடையும் வகையில் இத்திட்டம் ரூ.37.50 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.” என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து “TN Talk” (Tamil Nadu Talk) எனும் தொடர் நிகழ்ச்சிகள் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலை அரங்கில், நான்காவது “TN Talk” நிகழ்ச்சி, நாளை மாலை 6:00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இந்த நிகழ்வில், ரமோன் மகசேசே விருது பெற்ற டாக்டர் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டர் மந்தாகினி ஆம்தே ஆகியோர் பங்கேற்று, “Odyssey of Community Service: A Personal Reflection” என்ற தலைப்பில் உரையாற்றி பார்வையாளர்களுடன் கலந்துரையாடவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம், விருப்பமுள்ளோர் அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும், இந்நிகழ்ச்சியானது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ‘Youtube Channel” (www.youtube.com/ACLChennai)ல் நேரலையிலும் ஒளிபரப்பப்படும்.

டாக்டர் பிரகாஷ் ஆம்தே அவர்கள் ராமன் மகசேசே விருது பெற்றவரும் இந்தியாவின் நவீன காந்தி என்றும் அழைக்கப்படுபவருமான திரு பாபா ஆம்தேவின் மகன் ஆவார். மருத்துவர்களான டாக்டர் பிரகாஷ் ஆம்தே மற்றும் டாக்டர் மந்தாகினி ஆம்தே ஆகிய இருவரும் மகாராஷ்டிராவின் ஹேமல்காசா கிராமத்தில் உள்ள மக்களின் நலனிற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர். டாக்டர் பிரகாஷ் ஆம்தே 1973ல் லோக் பிராதாரி பிரக்லாப் என்ற திட்டத்தைத் தொடங்கினார், இது மதுரா கோண்டில் இருந்து பழங்குடியின மக்களின் வளர்ச்சிக்கு உதவியது.

பழங்குடியின மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்கும் லோக் பிராதாரி பிரக்லாப் தவாகனாவை உருவாக்க அவரது திட்டம் வழிவகுத்தது. இளம் காட்டு விலங்குகளின் தாய் விலங்குகள் கிராம மக்களால் உணவுக்காக வேட்டையாடப்படுகிறது என்பதால், ”அனிமல் ஆர்க்” என்றழைக்கப்படும் காட்டு விலங்குகளுக்காக ஒரு அனாதை இல்லத்தையும் டாக்டர் பிரகாஷ் ஆம்தே தொடங்கியுள்ளார். அவரது மனைவி டாக்டர். மந்தாகினி ஆம்தே தனது கணவரின் கனவுகளைப் பின்பற்ற அவருக்கு உதவி வருகிறார். இவர்களின் உரையை கேட்கவும் கலந்துரையாடவும் வாசகர்களையும் பொதுமக்களையும் பொது நூலக இயக்ககம் அன்புடன் அழைப்பு விடுத்துள்ளது.

The post அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் கலை அரங்கில் நாளை “TN Talk” நிகழ்ச்சி; அனுமதி இலவசம்..!! appeared first on Dinakaran.

Tags : Art Hall ,Anna Centenary Library ,Chennai ,Tamil ,Nadu ,Legislative Assembly ,
× RELATED 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான...