×

சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் திருமணம் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு மறைமுக மிரட்டல்?

கடலூர்: சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் திருமணம் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு மறைமுக மிரட்டல் என புகார் எழுந்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் குடும்பத்தில் குழந்தைகள் திருமணம் நடப்பதாக தமிழ்நாடு அரசுக்கு புகார்கள் வந்தன. இது தொடர்பாக சிதம்பரம் அனைத்து மகளிர் காவல்நிலைய போலீசார் கடந்த ஆண்டு செப்டம்பரில் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.

இந்த விவகாரத்தில் குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட தீட்சிதர்கள் குடும்ப சிறுமிகளுக்கு இருவிரல் பரிசோதனை நடத்தப்பட்டதாக ஆளுநர் ஆர்.என்.ரவி புகார் கூறியிருந்தார். ஆளுநர் புகாரின் பேரில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் நேற்று சிதம்பரம் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது இருவிரல் பரிசோதனை எதுவும் சிறுமிகளுக்கு நடத்தவில்லை என்று மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், விசாரணையின்போதே ஒன்றிய அரசு அதிகாரிகள் சிலர் சாட்சியம் அளித்த மருத்துவர்களை அச்சுறுத்தும் நோக்கில் மிரட்டியதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சியம் அளித்த மருத்துவர்களை ஒன்றிய அரசு அதிகாரி மிரட்டியதாக அரசு மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். சாட்சியம் அளிக்கக்கூடாது என்பதற்காகவே மீண்டும் மீண்டும் மருத்துவர்களிடம் விசாரணை நடத்துவதாகவும் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

The post சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் திருமணம் தொடர்பான வழக்கின் சாட்சிகளுக்கு மறைமுக மிரட்டல்? appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Cuddalore ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் நாடாளுமன்ற ெதாகுதி தேர்தல் செலவின பார்வையாளர் நியமனம்