×

செக்கானூர் கதவணையில் பராமரிப்பு பணி; காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றத்தால் கிராம மக்கள் அவதி

மேட்டூர்: மேட்டூர் அடுத்த செக்கானூர் மின்உற்பத்தி கதவணையில், வருடாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் காவிரியில் தண்ணீரின்றி ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதக்கிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்களில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு உள்ளனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அணையில் இருந்து 9 கி.மீ, தொலைவில் காவிரியின் குறுக்கே செக்கானூர் நீர்மின் உற்பத்தி கதவணை அமைந்துள்ளது. இந்த கதவணையில் 0.50 டிஎம்சி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த தண்ணீர் குடிநீர் திட்ட பணிகளுக்கும், மீன் வளத்தை பாதுகாக்கவும் பயன்படும்.

இந்நிலையில் கதவணையின் வருடாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் நேற்று முன்தினம் வெளியேற்றப்பட்டது. தண்ணீர் வெளியேற்றப்பட்டதால் காவிரியில் ஆங்காங்கே குட்டைபோல் தண்ணீர் தேங்கி உள்ளது. மே லும் குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 1500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சிற்றோடை போல செல்கிறது. இதனால் குட்டைகளில் உள்ள மீன்கள் கடும் வெப்பம் காரணமாகவும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகவும், டன் கணக்கில் செத்து மிதக்கின்றன. குறிப்பாக அரஞ்சான், ஆரால், ஜிலேபி உள்ளிட்ட மீன் வகைகள் ஏராளமாக செத்து மிதக்கின்றன.

இதனால் காவிரிக்கரையில் உள்ள நாவபட்டி, செக்கானூர், கோல்நாயக்கன்பட்டி, காவேரிகிராஸ், நாட்டாமங்கலம் ஆகிய கிராமங்களில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. காகங்களும், கழுகுகளும் மீன்களை கொத்திச் செல்கின்றன. காவிரி கரையை ஒட்டிய பகுதிகளில் உள்ள ஆலை கழிவுகள், சாக்கடை கழிவுநீர் ஆற்றில் கலப்பதாலும், சில லாரி டிரைவர்கள் கேரள மாநிலத்தில் தடைசெய்யப்பட்ட ரசாயண ஆலை கழிவுகளை ஏற்றி வந்து, மேட்டூரில் காவிரி கரையோரம் உள்ள சாக்கடைகள், நீரோடைகளில் விடுவதாலும், அவை நேரடியாக காவிரி ஆற்றில் நேரில் கலக்கின்றன. தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் போது கழிவுகளின் பாதிப்பில் இருந்து தப்பிய மீன்கள், தண்ணீரை வெளியேற்றிய பிறகு தேங்கிய சொற்ப அளவிலான நீரில், கழிவுகள் கலப்பதால் பாதிப்பு அதிகரித்து மீன்கள் செத்து மடிந்திருக்கலாம் என, கரையோர பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், செத்து மிதக்கும் மீன்களை கூடைகளில் அள்ளிச்சென்று கருவாடாக்கி, விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, இறந்து போன மீன்களை அப்புறப்படுத்த வேண்டும். மாசு கட்டுப்பாட்டு வாரியமும் மற்றும் மீன்வளத்துறையும், நீர் மாதிரியை ஆய்வு செய்து மீன்கள் இறப்புக்கான காரணம் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post செக்கானூர் கதவணையில் பராமரிப்பு பணி; காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்கள்: துர்நாற்றத்தால் கிராம மக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Sekanur Castle ,Cauvery ,METTUR ,Sekanur ,Sekanur Gate ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 90 கனஅடி