×

சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம்: தமிழ் அமைப்புகளின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சிங்கப்பூரில், சிங்கப்பூர் தமிழ்ச்சங்களுடன் இணைந்து நடைபெற்ற தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில், ‘வேர்களைத் தேடி’ என்ற அயலகத் தமிழ் இளைஞர்களுக்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

வேர்களைத் தேடி என்று புலம்பெயர்ந்து வாழும் இளைஞர்களை தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணமும், தமிழ் கலை பண்பாடு மற்றும் கலாச்சாரத்தினை அயலகத் தமிழர்களிடையே பரிமாற்றம் செய்யும் வகையிலும், ஆண்டுதோறும் 200 இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்து பண்டைய தமிழர்களின் கட்டடம், சிற்பக்கலை, நீர் மேலாண்மை, ஆடைகள் மற்றும் ஆபரணங்கள், கலை இலக்கிய பண்பாடு, தொல்லியல் ஆய்வுகள், அறிஞர்கள் மற்றும் சான்றோர்களுடன் கலந்துரையாடல் என்ற கலாச்சார பரிமாற்ற சுற்றுலாத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்காக சிங்கப்பூரில் தெரிவு செய்யப்பட்ட 10 இளைஞர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கினார்.

பின்னர் சிங்கப்பூர் தமிழ் அமைப்புகள் இணைந்து நடத்திய கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
சிங்கப்பூரில் தமிழ் நீக்கமற நிறைந்திருக்க அடிப்படைக் காரணமாக இருந்த முதல் பிரதமர் லீ குவான் யூக்கு தமிழர்கள் சார்பாக நன்றி செலுத்துகிறேன். ஒரு சிறிய தீவாக இருந்த சிங்கப்பூரை மிகக் குறுகிய காலத்தில் பொருளாதார வளர்ச்சி, தொழில் முன்னேற்றம், கட்டுமானம், கப்பல்துறை, விமானப் போக்குவரத்து முதலிய பலவற்றில் உலகமே வியக்கும் வகையில் முன்னேற்றத்துக்கு வித்திட்டவர் சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நோக்கி சிங்கப்பூர் நிறுவனங்களை ஈர்ப்பதற்காக வருகை தந்துள்ளேன். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி இருக்கின்றன. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை உள்ளிட்ட புலம்பெயர் நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள் எழுதும் நூல்களை வாங்கித், தமிழ்நாட்டு நூல் நிலையங்களில் வைப்பது. புலம்பெயர் நாடுகளில் உள்ள இளைஞர்களைத் தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லுதல்.புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ்ச் சான்றோர்களை – அறிஞர்களை – பேராசிரியர்களை மதித்து விருது வழங்குதல். கலைகள், பண்பாட்டுப் பரிமாற்றம், நாட்டுப்புறக் கலைஞர்களை புலம்பெயர் நாடுகளுக்கு அனுப்பி ஊக்குவித்தல், பண்பாட்டுப் பரிமாற்றம் பெருக பல கண்காட்சிகளை நடத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வைத்துள்ளீர்கள். இவை குறித்து தமிழ்நாடு சென்ற பின்பு ஆலோசித்து, முறையான அறிவிப்பை வெளியிடுவேன்.

2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ்நாட்டை மாற்றுவதற்கான லட்சிய இலக்கினை அரசு நிர்ணயித்துள்ளது. எனவேதான் பல்வேறு தொழில்துறை முதலீட்டு மாநாடுகளை நடத்தியுள்ளோம். அடுத்த ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாடு வரும் போது அதில் சிங்கப்பூர் முதலீட்டாளர்களும் அதிகமாக இடம்பெற வேண்டும்.

சிங்கப்பூரின் தந்தை என்று போற்றப்படும் லீ குவான் யூ தான் தமிழர்களும் தமிழும் இங்கு உயர்வை அடைந்தது. அண்ணா பேச்சால் ஈர்க்கப்பட்டவர் லீ குவான் யூ. சிங்கப்பூரில் அண்ணாவின் உரையைக் கேட்ட லீ குவான் யூ தனது மூத்த சகோதரர் என்று பாசத்தோடு குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல, தனது அலுவலகத்துக்கு அண்ணா அழைத்து விருந்து கொடுத்தார். அதனால் தான் லீ குவான் யூ இறந்த போது சிங்கப்பூரின் நாயகன் என்று போற்றினார் தலைவர் கலைஞர். ஆகவே ஒரு மகிழ்ச்சியான செய்தியை இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

லீ குவான் யூக்கு தமிழ்நாட்டில் நினைவுச் சின்னம் எழுப்ப நாங்கள் முடிவு செய்து இருக்கிறோம். இது தமிழ்நாட்டில் மன்னார்குடியில் அமைய இருக்கிறது. சிங்கப்பூரில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பகுதியினர் மன்னார்குடி, பட்டுக்கோட்டை பகுதிகளைச் சேர்ந்தவர்கள். எனவே, லீ குவான் யூ பெயரால் நூலகமும் சிலையும் மன்னார்குடியில் அமையும்.
உங்களை உயர்த்தும் தமிழ்நாட்டை உயர்த்த நீங்கள் அனைவரும் கைகோர்க்க வேண்டும். உங்கள் வாழ்வில் அனைத்து நலமும் வளமும் கிடைக்க தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் மட்டுமல்ல, உங்களின் ஒருவனாக – உங்கள் அன்பு உடன்பிறப்பாக எனது நல்வாழ்த்துகள். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் “மொழி சார்ந்த முயற்சிகள்’ என்ற தலைப்பில் சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் சண்முகம் கருத்துரையாற்றினர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு ‘சுற்றுலா மற்றும் பண்பாட்டு வாய்ப்புகள்’ தொடர்பாக உரையாற்றினார். நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ரவீந்திரன் வரவேற்புரை ஆற்றினார். முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர்க்கு பாரம்பரிய நடனம் மற்றும் நாதஸ்வர இசையுடன் கூடிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அத்துடன் இந்திய சிங்கப்பூர் கலைஞர்களின் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

The post சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூக்கு மன்னார்குடியில் நினைவு சின்னம்: தமிழ் அமைப்புகளின் கலாச்சார சந்திப்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Singapore ,Lee Kuan Yew ,Mannargudi ,Chief Minister ,M.K.Stal ,Chennai ,M. K. Stalin ,Mannargudi.… ,Dinakaran ,
× RELATED சிங்கப்பூரில் வாடகை பங்களா விவகாரம் 2...