×

தர்மபுரி அருகே நள்ளிரவில் பயங்கரம்: சுவாமி ஊர்வலத்தில் வெடி விபத்து மினி லாரி டிரைவர், சிறுவன் பலி

 

தர்மபுரி: தர்மபுரி அருகே நள்ளிரவில் கோயில் திருவிழா சுவாமி ஊர்வலத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் மினி லாரி டிரைவர் மற்றும் சிறுவன் உடல் கருகி பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார். தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்த சி.பள்ளிப்பட்டி கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்தாண்டு திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன் தொடங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்றிரவு 7 மணிக்கு கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து இரவு 10 மணிக்கு சுவாமி ஊர்வலம் தொடங்கியது.

மினி லாரியில் டிரைவரின் மேற்புறத்தின் கேபின் பகுதியில் மாரியம்மனை மின்விளக்குகளால் அலங்கரித்து வாணவேடிக்கை முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர். இதில் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர். மினி லாரியின் பின்புறத்தில் பட்டாசுகளை வைத்திருந்தனர். மினி லாரியை அதே ஊரைச் சேர்ந்த ராகவேந்திரன் (26) ஓட்டி வந்தார். பக்கத்து இருக்கையில் அசோக் மகன் ஆகாஷ் (6) என்ற சிறுவன் அமர்ந்திருந்தான். வழியில் மின்சார ஒயர்கள் தாழ்வாக சென்ற இடத்தில், ஆதி (50) என்பவர் பெரிய குச்சியால் மின்சார ஒயரை தூக்கி பிடித்து கொண்டிருந்தார். அப்போது மினி லாரியின் முன்னால் சரவெடி வைத்துள்ளனர்.

இதில் எதிர்பாராதவிதமாக தீப்பொறி மினிலாரியில் இருந்த பட்டாசு மீது விழுந்து கண் இமைக்கும் நேரத்தில் வண்டியில் இருந்த வானவெடிகள் மற்றும் பட்டாசுகள் வெடித்து சிதறின. ஊர்வலமாக வந்தவர்கள் சிதறி ஓடினர். மினிலாரியும் பலத்த சேதமடைந்தது. லாரியில் இருந்த சிறுவன் ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தான். படுகாயம் அடைந்த டிரைவர் ராகவேந்திரனை மீட்டு அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிறிது நேரத்தில் அவர் உயிர் இழந்தார். படுகாயம் அடைந்த ஆதி தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்த மொரப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதில் திருவிழாவை முன்னின்று நடத்தியவர்கள், அஜாக்கிரதையாக செயல்பட்டதால் தான் விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post தர்மபுரி அருகே நள்ளிரவில் பயங்கரம்: சுவாமி ஊர்வலத்தில் வெடி விபத்து மினி லாரி டிரைவர், சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Swami procession ,Dinakaran ,
× RELATED மாணவியை பலாத்காரம் செய்த...