×

செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம் 2 பெண் குழந்தைகளை கொன்று தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

*ராஜபாளையம் அருகே சோகம்

ராஜபாளையம் : ராஜபாளையம் அருகே செல்போன் பேசுவதை கணவன் கண்டித்ததால் 2 குழந்தைகளை கொன்று, தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே தெற்கு தேவதானத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். மனைவி ராமுத்தாய் (30). மகள்கள் நிஷா (6), அர்ச்சனா தேவி (3). ராமுத்தாய் 100 நாள் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். கடந்த 20ம் தேதி மாலை ராமுத்தாய் செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டிருந்ததை முத்துக்குமார் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து நடந்த வாக்குவாதத்தின்போது, முத்துக்குமார், ராமுத்தாய் செல்போனை பிடுங்கி கீழே போட்டு உடைத்துள்ளார். இதனால் கடந்த 2 நாட்களாக தம்பதியினரிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை, 2 மகள்களுடன் ராமுத்தாய் வீட்டை விட்டு சென்றுள்ளார். குழந்தைகளுடன் வெளியேறிய ராமுத்தாய் இரவில் வீடு திரும்பவில்லை. தகவல் அறிந்த உறவினர்கள் அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அருகே உள்ள விவசாய கிணற்றில் ராமுத்தாய், 2 மகள்களுடன் சடலமாக கிடந்துள்ளார். குடும்ப பிரச்னையில் மகள்களுடன் ராமுத்தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது விசாரணையில் தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் போலீசார், உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post செல்போன் பேசுவதை கண்டித்ததால் விபரீதம் 2 பெண் குழந்தைகளை கொன்று தாய் கிணற்றில் குதித்து தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Rajapalayam ,
× RELATED ராஜபாளையத்தில் திமுக வேட்பாளர் தீவிர...