×

காட்பாடி அருகே உறவினர் வீட்டில் 11 சவரன், ₹3.90 லட்சம் திருடிய கல்லூரி மாணவன் அதிரடி கைது

வேலூர் : காட்பாடி அருகே உறவினர் வீட்டின் கதவு உடைத்து 11 சவரன், ₹3.90 லட்சம் திருடிய கல்லூரி மாணவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த சேனூர் பகுதியை சேர்ந்தவர் டெல்லி, விவசாயி. இவரது மனைவி கவுரி(55). இவர்கள் கடந்த 21ம் தேதி பிற்பகல் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ள வீட்டை பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.

மீண்டும் வீடு திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோ திறக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 11 சவரன் நகை, ₹3.90 லட்சம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.இதுகுறித்து கவுரி விருதம்பட்டு போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தமிழ்செல்வன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் அப்பகுதியில் உள்ளவர்களிடம் நடத்திய விசாரணையில், அதேபகுதியைச் சேர்ந்த கவுரியின் உறவினர் மகனான மருத்துவக்கல்லூரியில் ஆபரேஷன் டெக்னிக்கல் கோர்ஸ் முதலாமாண்டு படிக்கும் 17 வயது சிறுவன் சம்பவத்தன்று கவுரியின் வீட்டிற்கு சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மாணவனை பிடித்து, நடத்திய விசாரணையில் பைக், செல்போன் வாங்கிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக கவுரியின் வீட்டில் நகை, பணம் திருடியது தெரியவந்தது. மேலும் மாணவன் கொடுத்த தகவலின்பேரில் அதே பகுதியில் பதுக்கி வைத்திருந்த 11 சவரன் நகை, ₹3.90 லட்சத்தை போலீசார் மீட்டனர். இதைதொடர்ந்து, சிறுவனை, கைது செய்து சிறுவர் சீர்திருத்த மையத்தில் அடைத்தனர். புகார் அளித்த 3 மணி நேரத்திற்குள் திருடுபோன நகை, பணத்தை மீட்டு, திருடனை பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காட்பாடி அருகே உறவினர் வீட்டில் 11 சவரன், ₹3.90 லட்சம் திருடிய கல்லூரி மாணவன் அதிரடி கைது appeared first on Dinakaran.

Tags : Kadbadi ,Vellore ,Gadbadi ,Dinakaran ,
× RELATED காட்பாடியில் ₹365 கோடி நிதியில் ரயில்...