×

வீரமும், ஈரமும் நிறைஞ்சது மதுரை மண்ணு… வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை வாழ்க்கை தந்தவருக்கு சீர்வரிசை: பிரிய மனமின்றி மணப்பெண் வழங்கி நெகிழ்ச்சி

திருப்பரங்குன்றம்: திருமணச் சீராக மாப்பிள்ளை வீட்டாருக்கு ஜல்லிக்கட்டு காளையை வழங்கி மணப்பெண் வீட்டார் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே அய்யங்கோட்டையைச் சேர்ந்தவர் சுகப்பிரியா. நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ராஜபாண்டி. இருவருக்கும் நேற்று முன்தினம் மதுரை நாகமலை புதுக்கோட்டையில் திருமணம் நடைபெற்றது. மணமகள் சுகப்பிரியா பொதுப்பணித்துறையில் பணியாற்றி வருகிறார். இவர் தனது வீட்டில் தமிழர் பாரம்பரியம் மாறாமல், ஜல்லிக்கட்டு காளையையும் வளர்த்து வந்தார்.

திருமணம் முடிந்த பின்னர் மணப்பெண் வீட்டார் மாப்பிள்ளை வீட்டாருக்கு சீர் வரிசை கொடுத்துள்ளனர். அப்போது மணமகள் சுகப்பிரியா, தான் வளர்த்த ஜல்லிக்கட்டு காளையையும் சீர்வரிசையாக வழங்கினார். மணமேடையில் ஏற்றி, மணமகனுக்கு அவர் அறிமுகம் செய்தார். தொடர்ந்து மணமகனும், மணமகளும் ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். சிறு வயது முதலே காளையை தனது சகோதரன் போல் வளர்த்த மணப்பெண், திருமணத்திற்கு பின் பிரிய மனமின்றி புகுந்த வீட்டுக்கு அந்த காளையையும் அழைத்துச் சென்றிருப்பது ஜல்லிக்கட்டு மீதான மதுரைக்காரர்களின் பாசத்தின் நெகிழ்ச்சியை படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்தது.

The post வீரமும், ஈரமும் நிறைஞ்சது மதுரை மண்ணு… வளர்த்த ஜல்லிக்கட்டு காளையை வாழ்க்கை தந்தவருக்கு சீர்வரிசை: பிரிய மனமின்றி மணப்பெண் வழங்கி நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Madurai ,jallikattu ,Madurai district ,Alankanallur ,
× RELATED மதுரை மாவட்டம் பாலமேடு அருகே...