×

ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைனில் கூடுதலாக 42 சேவைகளை பெறலாம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்

சென்னை: ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமலே இனி கூடுதலாக 42 சேவைகளை ஆன்லைனில் பெற முடியும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் என நாட்டில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், வாகனப் பதிவு, வாகனங்களை இயக்குவதற்கான ஓட்டுநர் உரிமம், நாடு முழுவதும் வாகனத்தை கொண்டு செல்வதற்கான நேஷனல் பர்மிட் உள்ளிட்ட பல்வேறு சேவைகளின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதனால், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள்(ஆர்டிஒ) எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்த சேவைகளை பெற மக்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை மற்றும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

இந்நிலையில் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் சார்பில், கடந்த ஆண்டு போக்குவரத்து தொடர்பான 58 சேவைகள் ஆன்லைனில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக, www.parivahan.gov.in என்ற இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் தற்போது பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பித்தல், ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம், சொந்த பயன்பாட்டு வாகனங்களின் உரிமையாளர் பெயர் மாற்றம் செய்தல் உள்ளிட்ட 6 சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ஆதார் அட்டையை ஆவணமாக கொண்டு வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரடியாக வராமலேயே ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப்பதிவு தொடர்பான 42 சேவைகளை இணையதளம் மூலம் பொதுமக்கள் பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக 42 சேவைகளை இணையவழியில் பெறுவதற்கு போக்குவரத்துறை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன்மூலம் கூடுதலாக 42 சேவைகளை, ஆதார் அட்டையை பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமத்தில் பெயர், முகவரி, பிறந்த தேதி, புகைப்படம், கையொப்பம் மாற்றம் செய்தல், வாகனப் பதிவெண் சான்றிதழில் திருத்தம் செய்தல், டூப்ளிகேட் ஓட்டுநர் உரிமம், எல்எல்ஆர், பெர்மிட் வாங்குதல், மோட்டார் வாகனங்களுக்கு தற்காலிக பதிவு பெறுதல், வாகனப் பதிவிற்கு தடையில்லா சான்று (என்.ஓ.சி) விண்ணப்பித்தல், மொபைல் எண்ணை அப்டேட் செய்தல், ஒரு மாவட்டத்தில் அல்லது மாநிலத்தில் இருந்து வேறொரு மாவட்டம் அல்லது மாநிலத்திற்கு வாகனப் பதிவை மாற்றம் செய்தல், நடத்துனர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட 42 சேவைகளை இனி ஆன்லைனில் பெற முடியும். இந்த சேவைகளை பெற ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.parivahan.gov.in சென்று உரிய முறையில் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு சேவைக்கும் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்படும்.

இது குறித்து போக்குவரத்து துறை உயர அதிகாரி கூறியதாவது: ஒன்றிய அரசு தரப்பில் போக்குவரத்து தொடர்பான சேவைகளை ஆன்லைன் மூலம் பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதன்படி முதல்கட்டமாக 6 சேவைகள் ஆன்லைன் மூலம் வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 42 சேவைகளை ஆன்லைனில் வழங்குவதற்கான ஒப்புதல் கிடைத்துள்ளது. அடுத்த ஒரு ஒரு வாரத்தில் இது நடைமுறைக்கு வரவுள்ளது. இதில் 22 சேவைகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் உரிமம் தொடர்பாகவும், மற்ற சேவைகள் வாகனப் பதிவு இந்த திட்டத்தின் மூலம் இடைத்தரகர்களை தவிர்த்து மக்கள் நேரடியாக அரசு நிரணயித்த கட்டணத்தை மட்டும் செலுத்தி சேவைகளை எளிதில் பெற முடியும். மேலும் எந்த எந்த சேவைகளை ஆன்லைனில் பெற முடியும் என்பதை ஆராய்ச்சி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த சேவைகளை இனி ஆன்லைன் மூலமாக மட்டுமே பெற முடியும் என்ற நிலையை கொண்டு வர வேண்டும் என திட்டமிட்டுள்ளோம். ஆனால் சில சேவைகளை நேரடியாக மட்டுமே பெற முடியும் அதில் மாற்றம் இருக்காது. இவ்வாறு அவர் கூறினார். ஆன்லைன் சேவையால் இடைத்தரகர்கள், ஏஜென்ட்டுகளின் தலையீடுகள் குறையும். லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமும் வராது என பொதுமக்கள் தெரிவித்தனர்.

The post ஆர்டிஓ அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ஆன்லைனில் கூடுதலாக 42 சேவைகளை பெறலாம்: போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Tags : RTO ,Transport Department ,Chennai ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு