×

கணவரிடமிருந்து குழந்தையை மீட்டுத் தர கோரி தாய் தற்கொலை முயற்சி-கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகள் லலிதா(22), இவருக்கும் திருக்கோவிலூர் பாடியந்தல் கிராமத்தை சேர்ந்த ஏழுமலை மகன் முருகன் என்பவருக்கும் கடந்த 2019ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளான். குடும்ப பிரச்னை காரணமாக லலிதா தனது தாய் வீட்டில் மகனுடன் வசித்து வருகிறார். கடந்த மாதம் 20ம்தேதி முருகன், அக்கராயபாளையத்திலுள்ள லலிதாவின் தாய் வீட்டுக்கு சென்று அஸ்வினை தூக்கி சென்றுவிட்டார். முருகன் வீட்டுக்கு சென்று குழந்தையை லலிதா கேட்டும் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் லலிதா புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மனவேதனையில் இருந்து வந்த லலிதா கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டரங்கம் அருகில் கேனில் மறைத்து எடுத்துவந்த மண்ணெண்ணெய் உடம்பில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தி மண்ணெண்ணெய் கேனை பிடிங்கி கொண்டு விசாரணை நடத்தி திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

முருகனின் செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது போன் சுட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில் இருந்ததால் அஸ்வின் குழந்தையை மீட்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
நாளை (இன்று) காலையில் குழந்தையை மீட்டு ஒப்படைப்பதாக திருக்கோவிலூர் மகளிர் போலீசார் லலிதாவிடம் உறுதியளித்துள்ளனர்.

The post கணவரிடமிருந்து குழந்தையை மீட்டுத் தர கோரி தாய் தற்கொலை முயற்சி-கள்ளக்குறிச்சியில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Arumugam ,Lalitha ,Akkarayapalayam ,Thirukovilur Padianthal ,
× RELATED கோடை விடுமுறை தினத்தையொட்டி...