×

15 வருடங்களுக்கு மேலாக அலைக்கழிப்பு பட்டா வழங்கக் கோரி தர்ணா

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியம், பாக்கம் கிராமத்தில் 15 குடும்பத்தினருக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. இதனால் உடனடியாக பட்டா வழங்க திருவள்ளூர் வட்டாட்சியரை விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த 2010ம் ஆண்டு வருவாய் கோட்டாட்சியர் ஆணை பிறப்பித்தார். ஆனால் இதுவரை விசாரணை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை. சுமார் 15 வருடங்களுக்கு மேலாக பட்டா வழங்காமல் அலைக்கழிக்கும் அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் 15க்கும் மேற்பட்ட பெண்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.

கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபடுவது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் நகர போலீசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பிறகு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்த மாவட்ட கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட நபர்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அப்போது மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கலைந்து சென்றனர்.

The post 15 வருடங்களுக்கு மேலாக அலைக்கழிப்பு பட்டா வழங்கக் கோரி தர்ணா appeared first on Dinakaran.

Tags : Tharna ,Thiruvallur ,Thiruvallur Union ,Bakkam ,Batta ,Tarna ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்