×

வாலாஜாபாத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வாலாஜாபாத்: வாலாஜாபாத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரயில் நிலையம், பேருந்து நிலையம், வங்கிகள், நூலகம், காவல் நிலையம், தாலுகா அலுவலகம், கருவுலக அலுவலகம், சர்பதிவாளர் அலுவலகம், ஒன்றிய அலுவலகம், மேல்நிலை பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. மேலும், இந்த வாலாஜாபாத்தை சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வாலாஜாபாத் சுற்றிலும் 100க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும், இயங்கி வருகின்றன. இந்நிலையில், எப்பொழுதுமே பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்து தரவேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், வாலாஜாபாத் சுற்று வட்டார பகுதிகளில் ஏற்படும் சிறு சிறு தீ விபத்துக்கள் மட்டுமின்றி சாலை விபத்து விவசாய கிணறுகளில் தவறி விழுபவர்களை மீட்பது உள்ளிட்ட பல்வேறு அவசர பணிகளுக்காக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் காஞ்சிபுரத்தில் இருந்து புறப்பட்டு வாலாஜாபாத் வருவதற்குள் பல்வேறு தீ சம்பவங்கள் முழுவதுமாக தீயில் கருகி சாம்பல் ஆகும் நிலை ஏற்படுகின்றன. இது குறித்து, இப்பகுதி கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகையில், வாலாஜாபாத் தாலுகாவாக கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டது.

இதன்மூலம், காஞ்சிபுரம் சென்று வந்த கிராம மக்கள் அருகாமையில் உள்ள வாலாஜாபாத் தாலுகா அலுவலகத்தில் சென்று தங்களின் பல்வேறு பணிகளை நிறைவேற்றி வருகின்றனர். மேலும், ஒரு தாலுகாவிற்கான முழு கட்டமைப்பு இப்பகுதியில் ஏற்படுத்தவில்லை, குறிப்பாக அவசர காலத்திற்கு உடனடியாக தொடர்புகொள்ளும் தீயணைப்பு நிலையம் இங்கு இல்லை. மேலும், சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் அவ்வப்பொழுது ஏற்படும் விபத்துகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தொடர்பு கொண்டால், அவர்கள் காஞ்சிபுரத்தில் இருந்து சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு வருவதற்குள் குடிசைகளோ அல்லது சிறு சிறு விபத்துகளில் சிக்குபவர்களை மீட்பது பெரும் சவாலாகவே உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், வாலாஜாபாத் பகுதியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் இப்பகுதி மக்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்’ என்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு, அனைத்து வசதிகளையும் கூடிய தீயணைப்பு நிலையம் வாலாஜாபாத்தில் அமைக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post வாலாஜாபாத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Wallajabat ,WALLAJAHABAR ,Wallajabad ,Walajabad Municipality ,Dinakaran ,
× RELATED வாலாஜாபாத் ஒன்றியத்தில் அமைக்கப்பட்ட...