சென்னை: கலாஷேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் இதுவரை 10 மாணவிகள் போலீசில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். கலாஷேத்ரா மாணவிகளுக்கு பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்டோர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. புகாருக்குள்ளான ஹரிபத்மன் உள்ளிட்டோர் மீது கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால் மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் போராட்டத்தை அடுத்து தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மகளிர் ஆணையம் கலாஷேத்ராவில் விசாரணை மேற்கொண்டது.
கண்டனம் வலுத்ததை அடுத்து பேராசிரியர் ஹரிபத்மன் உள்ளிட்டோர் மீது கலாஷேத்ரா நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பேராசிரியர்கள் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மாநில மகளிர் ஆணையம் ஏற்கெனவே விசாரணை நடத்தியது. 162 மாணவிகளிடம் விசாரணை நடத்தும்படி காவல்துறைக்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்தது. மகளிர் ஆணைய பரிந்துரையின்படி 162 மாணவிகளுக்கும் அடையாறு அனைத்து மகளிர் போலீஸ் சம்மன் அனுப்பியது. சம்மனை ஏற்று கடந்த 2 வாரங்களில் 10 மாணவிகள் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
சில மாணவிகள் எங்களுக்கும், இந்த புகாருக்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என கூறியுள்ளனர். நாங்கள் எந்த விதமான பாதிப்புகளும் உள்ளாகவில்லை, எங்களது ஆசிரியர்கள் மீது அன்பும், மரியாதையும் உள்ளது என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. எஞ்சிய மாணவிகளிடமும் வாக்குமூலம் பெற காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
The post கலாஷேத்ரா வழக்கில் புதிய திருப்பம்: 10 மாணவிகள் நேரில் ஆஜராகி விளக்கம்..! appeared first on Dinakaran.