×

சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு

 

பேராவூரணி, மே 22: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம் மீன்பிடி துறைமுக பகுதிகளில் விசைப்படகுகளை மீனவர் நலம் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983ன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும், மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 முடிய மொத்தம் 61 நாட்களுக்கு, பாரம்பரிய மீன்பிடி கலன்கள் நீங்கலாக விசைப்படகுகள், மற்றும் இழுவை படகுகள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிப்பது வழக்கம். இந்த தடை காலத்தில் அனைத்து விசைப்படகுகளும் கடலில் இருந்து கரைக்கு ஏற்றப்பட்டு பராமரிப்பு பணிகள் நடைபெறும்.

பேருந்துகளுக்கு ஆண்டுதோறும் எப்சி சான்றிதழ் வழங்குவது போல் மீன்வளத்துறை உதவி இயக்குநர், தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் படகுகள் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து சான்றிதழ் வழங்குவர். சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், கள்ளிவயல் தோட்டம் ஆகிய பகுதிகளில் 148 விசைப்படகுகளையும் மீன்வளத்துறை உதவி இயக்குநர் மணிகண்டன் , கூடுதல் இயக்குநர் கொளஞ்சிநாதன், ஆய்வாளர் கெங்கேஸ்வரி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வின் போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன்பிடிக்க தகுதியானதா என ஆய்வு செய்து அனைத்து படகுகளும் தகுதியானது என சான்றிதழ் வழங்கினர். கிழக்கு கடற்கரை சாலையில் நாகப்பட்டினம் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் வரை ஒரே கட்டமாக ஆய்வு நடைபெற்றது.

The post சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Fisheries Department ,Mallipattanam ,Setupavasatram ,Peravoorani ,Thanjavur District ,Sethubavasatram ,Mallipatnam ,Kalliwayalthottam ,
× RELATED கூடலூரில் உள்ள மீன்கடைகளில் கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்..!!