×

சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் பரிதாப பலி

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் உயிரிழந்தனர். தஞ்சாவூர் கீழவாசலை சேர்ந்தவர்கள் குப்புசாமி (68), விவேக் (36). தஞ்சாவூர் தென்கீழ் அலங்கம் பகுதியில் உள்ள மீன்சந்தையில் மீன் ெவட்டும் தொழில் செய்து வந்தனர். இந்த சந்தைக்கு எதிரே டாஸ்மாக் கடையும், அரசு அனுமதி பெற்ற பாரும் இயங்கி வருகிறது. டாஸ்மாக் கடையை திறப்பதற்கு முன் நேற்று காலை 11.25 மணியளவில் பாரில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுவை குப்புசாமியும், விவேக்கும் ஆளுக்கு ஒரு ‘கட்டிங்’ வாங்கி குடித்தனர். பின்னர் வெளியே வந்தபோது குப்புசாமி வாயில் நுரை தள்ளியும், வலிப்பு வந்தும் மயங்கி விழுந்தார். சிறிது நேரத்தில் விவேக்கும் மயங்கி விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்தபோது குப்புசாமி ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது. விவேக்கும் சிகிச்சை பலனின்றி மதியம் 2.45 மணியளவில் உயிரிழந்தார். இது குறித்து தஞ்சாவூர் போலீசார் வழக்கு பதிந்து இவர்கள் மதுவில் வேறு எதையாவது கலந்து குடித்தார்களா? என்று விசாரித்தனர். தகவலறிந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று டாஸ்மாக் கடை மற்றும் பாரை ஆய்வு செய்தார்.

சம்பந்தப்பட்ட மது பெட்டியில் இருந்த மீதமுள்ள மது பாட்டில்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் பயன்படுத்திய பாட்டில்களை பரிசோதனைக்காக போலீசார் எடுத்து சென்றனர். அந்த டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்கப்பட்டது. அங்கு வந்த டாஸ்மாக் உதவி மேலாளர் தங்க.பிரபாகரனை கூடியிருந்தவர்கள் சரமாரி தாக்கி பாருக்குள் தள்ளி சிறை வைத்தனர். அவரை போலீசார் மீட்டனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிவில் இருவரும் அருந்திய மதுவில் சயனைடு கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

The post சயனைடு கலந்த மதுவை குடித்த 2 பேர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kuppusamy ,Vivek ,
× RELATED தஞ்சாவூர் ஆர்.ஆர். நகர் பகுதியில்...