×

சென்னை கோட்டத்தில் ₹9.79 கோடி செலவில் 26 ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள்: நிர்பயா நிதியின் கீழ் அமைப்பு

சென்னை, மே 21: ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ரயில்களின் குற்றங்கள் நிகழாமல் தடுக்கவும், ரயில்களில் கடத்தல்கள் நடைபெறுவதை தடுக்கவும், குற்றவாளிகள் தப்பித்துச் செல்வதை தடுக்கவும், தமிழ்நாட்டின் ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அதன்படி, தெற்கு ரயில்வே நிர்வாகம் சார்பில், சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர் உள்பட முக்கிய ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதேபோல் ரயில் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய ரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இதுவரை நாடு முழுவதும் உள்ள 16 ரயில்வே மண்டலங்களில் 6,646 ரயில் பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தெற்கு ரயில்வேயில் 759 பெட்டிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ரயில் பெட்டிகளில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால், ரயில்களில் சந்தேகத்திற்கு இடமான சம்பவங்கள் ஏதேனும் நடந்தாலும் உடனே கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நிர்பயா நிதியின் கீழ் ₹500 கோடி செலவில் 900 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று இந்திய ரயில்வே அறிவித்தது. குறிப்பாக, ரயில் நிலையங்களில் உள்ள நடைபாதைகள், ஓய்வு அறைகள், டிக்கெட் கவுன்டர் ஆகியவற்றில் கண்காணிப்பு கேமராக்கள் படிப்படியாக பொருத்தப்பட்டு வருகிறது. இதை ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இதன் மூலம், 24 மணி நேரமும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு, குறிப்பாக பெண்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்படுகிறது. இந்த நிலையில், தெற்கு ரயில்வேயில் முதல்கட்ட திட்டத்தின் கீழ், சென்னை கோட்டத்தில் உள்ள 26 ரயில் நிலையங்களில் ₹9 கோடியே 79 லட்சம் செலவில் 528 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சேப்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, மந்தைவெளி, பசுமைவழிச்சாலை, கோட்டூர்புரம், இந்திரா நகர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி, சென்னை பூங்கா, சேத்துப்பட்டு, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், பல்லாவரம் உள்ளிட்ட 26 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதேபோல், 2 மற்றும் 3ம் கட்ட திட்டத்தில் அரக்கோணம், ஆந்திர மாநிலம் கூடூர் வழித்தடங்களில் உள்ள 50 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த டெண்டர் விடப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நுழைவாயிலில்…
ரயில் பெட்டிகளில் உள்பகுதியில் மட்டுமல்லாமல், பெட்டியின் நுழைவாயிலில், அதாவது இரு பக்கமும் கதவுபகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதன் மூலம் ரயிலில் ஏறுபவர்கள், இறங்குபவர்களையும் கண்டுபிடித்துவிட முடியும். இதன் மூலம் குற்றச் செயல்களை தடுக்க கண்காணிப்புகளை தீவிரப்படுத்த முடியும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post சென்னை கோட்டத்தில் ₹9.79 கோடி செலவில் 26 ரயில் நிலையங்களில் 528 சிசிடிவி கேமராக்கள்: நிர்பயா நிதியின் கீழ் அமைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Division ,Chennai ,Dinakaran ,
× RELATED தினகரன் மற்றும் சென்னை VIT இணைந்து நடத்தும் கல்வி கண்காட்சியில்…