×

11ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை

சிதம்பரம், மே 21: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் பகுதியில் கே.ஆர்.எம் நகரை சேர்ந்தவர் ஜானகி. இவரது மகன் ஜீவா (16). தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்த இவர் பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் மன உளைச்சலில் ஜீவா இருந்துள்ளார். இந்நிலையில் சிதம்பரம் அருகே விபீஷ்ணபுரம் ரயில்வே கேட் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட மாணவர் ஜீவா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று சிக்கியது. அதில், என்னோட அம்மா, பாட்டி, என்னை ரொம்ப கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க. நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது குறைந்த மதிப்பெண் எடுத்தேன். ஆனால் பதினோராம் வகுப்பில் நிறைய மதிப்பெண்கள் பெறலாம் என்று நினைத்தேன். ஆனால் இந்த முறையும் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளேன். இதனால் கல்வியில் தகுதி இல்லாதவன் ஆனதால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை. மேலும் பாட்டியை நல்லா பார்த்துக்க வேண்டும், தம்பியை நல்லா பார்த்துக்க வேண்டும், அம்மா நீ உன் உடம்பை பார்த்துக்கோ, என எழுதியுள்ளார். 11ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post 11ம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் ரயில் முன் பாய்ந்து மாணவர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Cuddalore district ,Chidambaram Annamalai Nagar ,Kuddalore district ,R.R. Janaki ,M City ,
× RELATED பாஜவோடு மறைமுக கூட்டணி நாடாளுமன்ற...