×

பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் 56 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண்

நாமக்கல்: பள்ளிபாளையத்தில் 56 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சியடைந்த குடும்பத்தலைவி, பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் தமிழ்மணி. இவரது மனைவி தனம். இவர்கள் கடந்த 30 ஆண்டுக்கு மேலாக பாத்திரக்கடை நடத்தி வருகின்றனர். தனத்திற்கு தற்போது 56 வயதாகிறது. இவரது 2 மகன்களுக்கும் திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர். 8ம் வகுப்பு முடித்த 2 ஆண்டுகளிலேயே, தனத்திற்கு திருமணமாகி விட்டது. அதன் பிறகு, பல்வேறு தருணங்களில் படிப்பை தொடர முயன்றும், குடும்ப பொறுப்பு அதிகரித்ததால் காலம் கடந்து வந்தது.

இந்நிலையில், தற்போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய அவர், 247 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். பள்ளியை விட்டு நின்று, 42 வருடங்களுக்கு பிறகு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றது குறித்து அவர் கூறியதாவது: 1980ல் எட்டாம் வகுப்பு தேர்வு எழுதினேன். அதன் பிறகு பள்ளி செல்லவில்லை. அதன்பிறகு திருமணமானது. இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி, பேரக் குழந்தைகள் உள்ளனர். தற்போது, மனவளக்கலையின் யோகா பயிற்சி வகுப்பில் சேர்ந்து, அடிப்படை கோர்ஸ் முடித்துள்ளேன். யோகா ஆசிரியர் பயிற்சி பெற விரும்புகிறேன். ஆனால், அதில் சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக தனியார் பயிற்சி மையத்தில் 3 மாதமாக படித்தேன். எனது கணவர் மற்றும் மகன்கள் ஊக்கமளித்தனர். படிப்பிற்கு எந்த தடையும் இல்லை. ஆர்வமும், முயற்சியும் இருந்தால் எந்த வயதிலும் படித்து தேர்ச்சி பெறலாம். எனது இந்த முயற்சியை, தெரிந்தவர்கள், யோகா பயிற்சியாளர்கள், உறவினர்கள் பலரும் பாராட்டுகின்றனர். இது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு தனம் கூறினார்.

The post பேரக்குழந்தைகள் உள்ள நிலையில் 56 வயதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பெண் appeared first on Dinakaran.

Tags : NAMACKAL ,Namakkal ,
× RELATED நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே...