×

காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை மணக்க முயற்சி: திருமணத்தை தடுத்து நிறுத்தி காதலனை கரம்பிடித்த பெண்

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் லெனின் கிராஸ் (29). இன்ஜினியரிங் படித்து விட்டு துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் நெல்லை மாவட்டம் பணகுடியை சேர்ந்த பி.காம்.பட்டதாரி ரிமோலின் விண்ணரசி (24) என்பவருக்கும் வாட்ஸ் அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நட்பாக பழகிய இருவரும் கடந்த 3 வருடமாக காதலிக்க தொடங்கினர். இதனால் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றி வந்தனர். ரிமோலின் விண்ணரசியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கிராஸ் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் வெளிநாடு சென்ற கிராஸ், ரிமோலின் விண்ணரசிக்கு செலவுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் அனுப்புவாராம். வெளிநாட்டில் இருந்தாலும் இருவரும் வாட்ஸ் அப் மூலம் தினமும் பேசி வந்தனர். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு லெனின் கிராஸ் சொந்த ஊர் திரும்பினார். லெனின் கிராஸ் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியாததால் ஊர் திரும்பிய அவருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

குளச்சல் அருகே சைமன்காலனியை சேர்ந்த ஒரு பெண்ணை பார்த்து கடந்த 11ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதற்கு லெனின் கிராசும் சம்மதித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்குள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் திருமணத்தில் பங்கேற்பதற்காக உற்றார் உறவினர்கள் அனைவரும் வந்துவிட்டனர். இதனையறிந்த ரிமோலின் விண்ணரசி சைமன்காலனிக்கு விரைந்து சென்று அங்கு தனது காதலனுக்கு திருமணம் நடைபெற இருந்த கிறிஸ்தவ தேவாலயத்துக்கு சென்றார். மேலும் இது தொடர்பாக பங்குத்தந்தையிடம் முறையிட்டார். இதனால் திருமணம் நிறுத்தப்பட்டது.

பின்னர் இது குறித்து ரிமோலின் விண்ணரசி மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் செய்தார். இவரது புகார் மனுவை பரிசீலித்த எஸ்.பி. மனு மீது நடவடிக்கை எடுக்க குளச்சல் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் இருவரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில் ரிமோலின் விண்ணரசி அளித்த புகாரில் ஆதாரங்கள் இருந்ததால், விண்ணரசியை திருமணம் செய்யும்படி லெனின் கிராசுக்கு போலீசார் அறிவுரை வழங்கினர்.

இதையடுத்து ஒரு வழக்குரைஞர் ஏற்பாட்டின்படி இருவரும் குளச்சலில் ஒரு குருசடி முன்பு மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய போலீசார் மீண்டும் அறிவுரை வழங்கினர். இதையடுத்து விண்ணரசி காதல் கணவர் லெனின் கிராசுடன் சென்றார்.

The post காதலித்து ஏமாற்றிவிட்டு வேறு பெண்ணை மணக்க முயற்சி: திருமணத்தை தடுத்து நிறுத்தி காதலனை கரம்பிடித்த பெண் appeared first on Dinakaran.

Tags : Nagargo ,Lenin Cross ,Pillathopp ,Villikshandai, Kannyakumari District ,Dubai ,
× RELATED சென்னை-நாகர்கோவில் வந்தே பாரத்...