×

விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்த முதியவர்

 

விழுப்புரம், மே. 20: விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உதவ யாசகம் எடுத்து கிடைத்த ரூ.10,000 பணத்தை அளிக்க வந்த முதியவரால் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஆழங்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் பூல்பாண்டியன்(75). யாசகம் எடுப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக யாசகம் எடுத்த பணத்தில் அரசுப்பள்ளிகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம், கேமிரா, பெஞ்ச் உள்ளிட்டவற்றுக்காக நிதியுதவிகளை செய்துள்ளார். கொரோனா காலத்தில் முதலமைச்சரின் நிவாரண உதவிக்கு ரூ.1 லட்சமும் வழங்கியுள்ளார். இந்நிலையில் மரக்காணத்தில் விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்துக்கு நிதியுதவி அளிப்பதற்காக ரூ.10 ஆயிரம் பணத்துடன் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.

அப்போது முதல்வரின் நிவாரண நிதிக்கு இந்த பணத்தை அளிக்க வேண்டுமென அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்தார். அதிகாரிகளோ பணத்தை நேரடியாக வாங்கமாட்டோம். நீங்களே வங்கியில் செலுத்துங்கள் என தெரிவித்தனர். இதுகுறித்து பூல்பாண்டியன் கூறுகையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக யாசகம் எடுத்து, அந்த பணத்தை மற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். விஷச்சாராயம் குடித்து சிலர் உயிரிழந்த தகவலைகேட்டு அவர்களின் குடும்பத்துக்கு நிதிஉதவி அளிக்க யாசகம் எடுத்த ரூ.10 ஆயிரத்தை கொண்டு வந்தேன் என தெரிவித்தார். பின்னர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் முதல்வரின் நிவாரண நிதியில் பணத்தை செலுத்திவிட்டு சென்றார்.

The post விஷச்சாராயம் குடித்து உயிரிழந்த குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் நிதியுதவி அளித்த முதியவர் appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Yasakam ,Dinakaran ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...