×

அரசு உறுதுணையாக இருக்கும்: மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு கைகள் பொருத்திட நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு கைகள் பொருத்திட நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டம், நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயின்ற இரண்டு கைகளை இழந்த மாணவர் க்ரித்தி வர்மா மற்றும் அவரது தாயாரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டதோடு, அம்மாணவனுக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளையும், உயர்கல்வி படிப்பதற்கான உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; இன்று வெளிவந்துள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகளில் வெற்றி பெற்று, தங்களுடைய கல்வியில் அடுத்த நிலைக்குச் செல்லும்
மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். பொதுத்தேர்வு செய்திகளைக் கவனிக்கும்போது, மாணவர் க்ரித்தி வர்மா அவர்களின் வெற்றிச் செய்தி என் கவனத்தை ஈர்த்தது. மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு நெஞ்சம் நிறை வாழ்த்துகள். அவரது தாயாரைத் தொடர்புகொண்டு பேசினேன்.

அவருக்குக் கைகள் பொருத்திடத் தேவையான மருத்துவ நடவடிக்கைகளை மேற்கொண்டிட மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். நம்பிக்கை ஒளியென மின்னிடும் மாணவர் க்ரித்தி வர்மா மேற்படிப்புகள் பலவும் கற்றுச் சிறந்து விளங்கிட வேண்டும். அவருக்கு நமது அரசு உறுதுணையாக இருக்கும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post அரசு உறுதுணையாக இருக்கும்: மாணவர் க்ரித்தி வர்மாவுக்கு கைகள் பொருத்திட நடவடிக்கை எடுக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Govt ,Chief Minister ,MK Stalin ,Kriti Verma ,Chennai ,M.K.Stalin ,M.K. Stalin ,M.K.Stal ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...