×

விக்கிரவாண்டி அருகே பரபரப்பு; மூடப்பட்ட கல்குவாரியில் வாலிபர் சடலம்: கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே செயல்படாத கல்குவாரி குட்டையில் வாலிபர் சடலம் கிடந்தது. அவரை யாராவது கொலை செய்து குட்டையில் வீசினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கஞ்சனூர் குருவட்டம் முட்டத்தூர் மற்றும் அரசலாபுரம் எல்லைக்கிடையே உள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மிதந்தது. இன்று காலை இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் கஞ்சனூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த கஞ்சனூர் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் தலைக்குப்புற கடந்த உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், கஞ்சனூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இதுவரை எந்த ஆணும் மாயமாகவில்லை என போலீசார் தெரிவிக்கின்றனர். இதனால் வெளியிடத்தில் கொலை செய்யப்பட்டு இங்குள்ள செயல்படாத கல்குவாரி குட்டையில் வீசப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இது தொடர்பாக நேமூர் விஏஓ கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

கடந்த வாரம் இதே காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலாவனூர் கிராமத்தில் பிளஸ் ஒன் மாணவி கொலை செய்யப்பட்டு சுடுகாட்டில் புதைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கல் குவாரி குட்டையில் வாலிபர் சடலம் மிதப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

The post விக்கிரவாண்டி அருகே பரபரப்பு; மூடப்பட்ட கல்குவாரியில் வாலிபர் சடலம்: கொலை செய்து வீசப்பட்டாரா? போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Vikravandi ,Vikrawandi ,Valibur ,Kalhugari ,Wickrawandi ,Kalguari ,Waliber ,Kalgwari ,Dinakaran ,
× RELATED 21 குண்டுகள் முழங்க விக்கிரவாண்டி...