அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாக நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் தெரிவித்துள்ளார். ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்சு ஓபன் தொடர் வருகிற 22ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் தொடங்க உள்ளது. சமீபத்திய டென்னிஸ் தொடர்களில் காயம் காரணமாக பங்கேற்காத நடால், பிரெஞ்சு ஓபனில் இருந்தும் விலகி உள்ளார். நடப்பு தொடரில் பங்கேற்றால் காயம் அதிகரிக்கும் என கவலை தெரிவித்துள்ள நடால், அடுத்த ஆண்டு ஓய்வு பெற திட்டமிட்டு இருப்பதாகவும் கூறி உள்ளார். 14 முறை பிரெஞ்சு ஓபனில் மகுடம் சூடியுள்ள நடால், தொடரில் பங்கேற்காதது அவரது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தி உள்ளது.
செய்தியாளர் சந்திப்பில் தனது ஓய்வு குறித்து கூறிய அவர்; கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை. அதனை சரி செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்திற்கும் எனது உடல் முழுமையாக ஒத்துழைக்கவில்லை.மேலும் 2024 தொழில்முறை டென்னிஸில் தனது இறுதி ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார். “இது நான் எடுக்கும் முடிவு அல்ல, என் உடல் எடுக்கும் முடிவு” என்று அவர் கூறினார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாது டென்னிஸ் ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
The post அடுத்த ஆண்டுடன் ஓய்வு பெற நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடால் திட்டம்: ரசிகர்கள் அதிர்ச்சி..! appeared first on Dinakaran.