×

தனியார் மருத்துவமனை 8வது மாடியில் இருந்து குதித்து டெல்லி எய்ம்ஸ் பெண் டாக்டர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

திருவனந்தபுரம்: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த பெண் டாக்டர் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையின் 8வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் அடிமாலி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன். அவரது மகள் லட்சுமி (32). டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் டெல்லியில் வைத்து ஏற்பட்ட ஒரு விபத்தில் அவரது கைமுட்டில் காயம் ஏற்பட்டது. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக கேரளாவுக்கு திரும்பினார்.

அதன்படி கடந்த வாரம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் அவரது தாயும் தங்கி இருந்தார். இந்தநிலையில் நேற்று அதிகாலை சுமார் 5 மணி அளவில் கழிப்பறைக்கு செல்வதாக தாயிடம் கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு நீண்ட நேரமாக அவர் திரும்பி வரவில்லை. இது குறித்து லட்சுமியின் தாய் மருத்துவமனை ஊழியர்களிடம் கூறினார். மருத்துவமனை ஊழியர்கள் சென்று பார்த்தபோது லட்சுமி தலையில் பலத்த காயங்களுடன் இறந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து சேராநல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று லட்சுமியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராவை பரிசோதித்து பார்த்தனர். அப்போது லட்சுமி அனுமதிக்கப்பட்டிருந்த 3வது மாடியில் இருந்து 8வது மாடிக்கு லிப்டில் செல்வது தெரியவந்தது. எனவே அவர் தற்கொலை செய்வதற்காகத் தான் 8வது மாடிக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

The post தனியார் மருத்துவமனை 8வது மாடியில் இருந்து குதித்து டெல்லி எய்ம்ஸ் பெண் டாக்டர் தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Delhi AIIMS ,Thiruvananthapuram ,AIIMS Hospital ,Delhi ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!