×

வைத்திலிங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம்: சேலத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் திடீர் மோதல்

சேலம்: சேலம் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் இன்று மாலை 4இடங்களில் ஓபிஎஸ் அணி ஆதரவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஓபிஎஸ் அணியின் முக்கிய தலைவர்களான வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன், கு.ப.கிருஷ்ணன் மற்றும் ஜேசிடி பிரபாகரன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இதற்காக ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் மாநகரில் பல்வேறு இடங்களில் அதிமுக கொடிகளை நிர்வாகிகள் கட்டினர். இந்த வகையில் சேலம் பேலஸ் தியேட்டர் பகுதியில் கூட்டம் நடக்கும் திருமண மண்டபத்தின் முன்பும் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான வெங்கடாசலம் தலைமையில் அப்பகுதியில் நிர்வாகிகள் திரண்டனர். அப்போது அவர்கள், கொடிகளை கட்டிக் கொண்டிருந்த ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் தினேஷிடம் பலத்த வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. நீங்கள் எப்படி எங்களது கட்சி கொடியை கட்டலாம்? என்று பலத்த வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் கை கலப்பிலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து சமாதானம் செய்தனர். இதற்கிடையில் அதிமுக மாவட்ட செயலாளர் வெங்கடாசலம், மாநகர போலீஸ் உதவி கமிஷனர் வெங்கடேசனை சந்தித்து புகார் ஒன்றையும் அளித்தார். இதையடுத்து ஓபிஎஸ் அணியினர் கொடிகளை அகற்றினர். இதனால் சேலத்தில் பரபரப்பு நிலவி வருகிறது.

The post வைத்திலிங்கம் தலைமையில் ஆலோசனை கூட்டம்: சேலத்தில் ஓபிஎஸ்-இபிஎஸ் அணிகள் திடீர் மோதல் appeared first on Dinakaran.

Tags : Vidilingam ,OBS ,Saleam ,Salem ,Salem District ,Dinakaran ,
× RELATED பாஜவை தோற்க வைத்து விட்டு ஓபிஎஸ், டிடிவியுடன் அண்ணாமலை தனிக்கட்சி