சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதிகரிக்கும் வெப்பதால், மக்கள் பகல் நேரங்களில் வெளியே நடமாட முடியாத சூழல் உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வெப்பம் வாட்டி வதைக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்.
இந்த நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்து உள்ளது. இயல்பு நிலையிலிருந்து வெப்பநிலை 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது.
மேலும், தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 21ம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வெயிலில் இருந்து தங்களை காத்துக்கொள்ள மக்கள், நுங்கு, இளநீர், தர்பூசணி மற்றும் ஜூஸ் கடைகளில் அதிக அளவில் கூடுவதை காணமுடிகிறது.
இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் 20.05.2023 முதல் 23.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.
The post வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.
