×

திருவாடானை அருகே வாகனத்தை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை

திருவாடானை, மே 19: திருவாடானை அருகே ஜல்லி கற்கள் பெயர்ந்து வாகனத்தை பஞ்சராக்கும் தார் சாலையை சீரமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவெற்றியூரில் இருந்து தொண்டிக்குச் செல்லும் நெடுஞ்சாலையில் கீழ அரும்பூர் கிராமத்திற்கு சுமார் இரண்டு கிலோ மீட்டர் பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தார்ச்சாலையாக அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்றது. இந்நிலையில் இந்த சாலையின் கற்கள் அனைத்தும் பெயர்ந்து கரடு முரடாக மாறிவிட்டது. இதனால் போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இருசக்கர வாகனங்கள் இந்த சாலையில் செல்லும்போது அடிக்கடி பஞ்சராகி விடுகிறது.

எனவே இதனை மீண்டும் சீரமைத்து தரவேண்டும் என கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கீழ அறும்பூர் பழனியப்பன் கூறுகையில், இந்த சாலை கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலையாக போடப்பட்டது. இப்போது மிகவும் மோசமாக கற்கள் அனைத்தும் பெயர்ந்து கிடக்கிறது. சுமார் 2 கிலோ மீட்டர் மட்டும் உள்ள இந்த சாலை வாகனங்கள் பயணிக்க முடியாத அளவில் மோசமாகி விட்டது. அவசரத்திற்கு ஆட்டோ கூட வர மறுக்கின்றனர். பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

The post திருவாடானை அருகே வாகனத்தை பஞ்சராக்கும் சாலையை சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thiruvadan ,Tiruvadanai ,Tiruvadan ,
× RELATED விஷ வண்டுகள் அழிப்பு