ஈரோடு: அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், விரைவில் முதல்வர் திறந்து வைக்க உள்ளார் எனவும் அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூட்டரங்கில் அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் சு.முத்துசாமி அளித்த பேட்டி: கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 24,468 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும் வகையில் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய ஏரிகள் மற்றும் 971 குளம், குட்டைகள் என 1,045 நீர் நிலைகளுக்கு நீர் நிரப்பும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக இதுவரை ரூ.1624.73 கோடி நிதி செலவிடப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 20ம் தேதி முதல் சோதனை தொடங்கப்பட்டு, 6 நீரேற்று நிலையங்கள் மற்றும் பிரதான குழாய்களில் சோதனை ஓட்டம் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 99 சதவீத பணிகள் நிறைவுற்றுள்ளது. விரைவில் இத்திட்டத்தை முதல்வர் திறந்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.
The post 99 சதவீத பணிகள் நிறைவு அத்திக்கடவு-அவிநாசி திட்டம் விரைவில் முதல்வர் திறப்பார்: அமைச்சர் முத்துசாமி தகவல் appeared first on Dinakaran.