×

திருமழிசை, காக்களூர் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் ரூ.110 கோடியில் பணிகள்: விரைந்து முடிக்க தா.மோ.அன்பரசன் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு சிட்கோ திருமழிசை, காக்களூர், அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் ரூ.110.81 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை அமைச்சர் தா.ேமா.அன்பரசன் நேற்று ஆய்வு செய்தார். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தமிழ்நாடு சிட்கோவால் காக்களூர் தொழிற்பேட்டையில், 475 தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் ரூ.2.72 கோடியில், நாள் ஒன்றுக்கு 8 லட்சம் லிட்டர் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்யும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை நேற்று ஆய்வு செய்தார்.

மேலும், தொழில் முனைவேரர்களுக்கு ரூ.2.92 கோடியில் கட்டப்பட்ட பொது உற்பத்தி மையக்கட்டிடத்தினையும் ஆய்வு செய்தார். அதில் 4,500 சதுர அடியில் அமைந்துள்ள சேமிப்பு கிடங்கிற்கான வாடகையினை விரைந்து நிர்ணயித்து தொழில்முனைவோருக்கு ஒதுக்க வேண்டும் என அறிவுறுத்தினார். காக்களூர் தொழிற்பேட்டையில் ரூ.8.34 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு பராமரிப்பு பணிகளை பார்வையிட்ட அமைச்சர், மத்திய மின்பொருள் சோதனைக் கூடத்தில் ரூ.8.27 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட எல்.இ.டி விளக்குகள் சோதனைக்கூடம், தீ பரவாமல் தடுக்கும் மின்சார கேபிள் சோதனைக்கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்தார். திருமழிசை தொழிற்பேட்டையில் ரூ.6.81 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளையும் பார்வையிட்டார்.

அதனை தொடர்ந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ரூ.60.55 கோடியில் 1.31 லட்சம் சதுர அடியில் 112 தொழிற்கூடங்களுடன் கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி தொழில் வளாகத்தினை அமைச்சர் பார்வையிட்டார். இந்த திட்டத்தை வரும் செப்டம்பர் மாதத்திற்குள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றார். மேலும், ரூ.1.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.29.47 கோடியில் 5 தளங்களுடன் 810 தொழிலாளர்கள் தங்கும் வகையில் கட்டப்பட்டு வரும் தொழிலாளர் தங்கும் விடுதியினை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வு கூட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் அருண்ராய், தொழில் வணிக ஆணையர் சிஜி தாமஸ், தொழில் வணிக கூடுதல் ஆணையர் கிரேஸ் பச்சாவ், சிட்கோ மேலாண்மை இயக்குநர் மதுமதி, தொழில் வணிக கூடுதல் இயக்குநர் ஏகாம்பரம், சிட்கோ பொறியாளர்கள், தொழிற்பேட்டை கிளை மேலாளர்கள் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post திருமழிசை, காக்களூர் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் ரூ.110 கோடியில் பணிகள்: விரைந்து முடிக்க தா.மோ.அன்பரசன் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Kakaluru ,Kakalur Ambathur ,Andarasan ,Chennai ,Minister ,T.E. Ma. Andarasan ,Kakalur Ambanthur ,Moe Andarasan ,Dinakaran ,
× RELATED சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம்...