×

ஒருதலைக்காதலால் விபரீதம்: பெண் தர மறுத்தவர்களை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (40), அதே கிராம எல்லையில் காப்புகாடு அருகிலுள்ள விவசாய நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி கலையம்மாள் (32), இவர்களுக்கு 3 மகள்கள் ஒரு மகன் உள்ளார். இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் பாரதி (23), என்பவரை கோவிந்தன் வளர்த்து வந்தார். வளர்ப்பு மகனான பாரதி, கோவிந்தனுடன் சேர்ந்து விவசாய பணிகளை செய்து வந்துள்ளார். இதனிடையே கோவிந்தனின் மூத்த மகளை பாரதி ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடந்த 14ம் தேதி அந்தப்பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டபோது கோவிந்தன் மறுத்துள்ளார்.

இதன் காரணமாக நேற்று முன்தினம் மாலை பாரதி வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து கோவிந்தனை நோக்கி சுட்டுள்ளார். குறி தப்பியதால் கோவிந்தனின் தலையில் அரிவாளால் வெட்டி, துப்பாக்கியின் பின்பக்க கட்டையால் சரமாரியாக தாக்கியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்த கோவிந்தனின் மனைவி கலையம்மாளையும் நாட்டு துப்பாக்கியால் சுட்டுள்ளார். அதில் கலையம்மாளுக்கு வலது முழங்காலில் குண்டு பாய்ந்து பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் பாரதி கையில் வைத்திருந்த அரிவாளால் கலையம்மாள் கையிலும் வெட்டி விட்டு தப்பியோடிவிட்டார்.

தற்போது கோவிந்தன் சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மனைவி கலையம்மாள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து காப்புக்காட்டில் தலைமறைவான அவரை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் உள்ள மழவந்தாங்கல் மலை அடிவாரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பாரதியை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி மற்றும் அரிவாள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டு துப்பாக்கிகள் பதுக்கல்
கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் பகுதியில் சிலர் நாட்டு துப்பாக்கியை பயன்படுத்தி வேட்டையாடி வருவதாக தெரிகிறது. இதில் கோவிந்தன் மற்றும் பாரதி இருவரும் அவர்களது கூட்டாளியுடன் வேட்டைக்கு சென்று காட்டு பன்றி, முயல், உடும்பு, மான் உள்ளிட்டவைகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் பாரதி மற்றும் அவனது கூட்டாளிகளில் பலர் நாட்டு துப்பாக்கிகள் இன்னமும் காட்டிற்குள் மறைத்து வைத்திருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே தீவிர விசாரணை நடத்தி பதுக்கி வைத்துள்ள நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ய வேண்டும் என கூறுகின்றனர்.

The post ஒருதலைக்காதலால் விபரீதம்: பெண் தர மறுத்தவர்களை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Viluppuram ,Viluppuram District Kandachipuram ,Govindan ,40 ,Kavukadu ,
× RELATED கரும்பு விவசாயத்திற்கு பெயர்போன...