×

இணை, துணை ஆணையர்கள் தலைமையில் போரூர், அம்பத்தூர் பகுதிகளில் போலீசார் தீவிர சைக்கிள் ரோந்து:  குற்றங்களை தடுக்க அதிரடி  வாகனங்கள் தீவிர சோதனை

சென்னை, மே 18: குற்றச் சம்பவங்களை தடுக்க பொதுமக்களுடன் போலீசார் தொடர்பில் இருக்கும் வகையில் ‘அக்கம்பக்கம் கண்காணிப்பு’ என்ற திட்டம் ஆவடி காவல் ஆணையரகத்தின் சார்பில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக போரூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அக்கம்பக்கம் கண்காணிப்பு என்ற திட்டம் ஆவடி காவல் ஆணையரக இணை இயக்குநர் விஜயகுமார் ஐபிஎஸ் தலைமையில் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி போலீசார் குடியிருப்பு பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று கண்காணிப்பார்கள். மேலும் அந்த பகுதியில் தகவல் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் குற்றச்சம்பவங்கள் குறித்த தகவல்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கான பிரச்னைகள், பாதுகாப்பு, போதை பொருள் நடமாட்டம் குறித்து தகவலறிந்து குற்றச் சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்நிலையில் இணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் துணை ஆணையர் பாஸ்கரன், உதவி ஆணையர் ராஜீவ் பிரின்ஸ் ஆரோன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு அய்யப்பன்தாங்கல், போரூர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, சக்தி நகர், செட்டி தெரு, குன்றத்தூர் சாலை, மதனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சைக்கிளில் சென்று திடீர் ஆய்வு செய்தனர். அதிகாலை வரை நீடித்த இந்த சைக்கிள் ரோந்து மற்றும் ஆய்வின்போது வங்கிகள், ஏடிஎம், தங்கும் விடுதி, நகை கடைகள், அடுக்குமாடி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும், போலீசாரின் பணிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும் கார், இரு சக்கர வாகனங்களில் சோதனை செய்யப்பட்டது.

இதுபோல, அம்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட அம்பத்தூர் பேருந்து நிலையம், ஒரகடம், அம்பத்தூர் எஸ்டேட், கள்ளிக்குப்பம் போன்ற பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், ஏ.டி.எம் மையங்கள், திரையரங்குகள் போன்ற இடங்களில் குற்றச்செயல்களை தடுக்கும் பொருட்டு போலீசார் ரோந்து பணிக்கு செல்வது வழக்கம். அதன் ஒரு பகுதியாக செங்குன்றம் காவல் துணை ஆணையர் மணிவண்ணன், அம்பத்தூர் உதவி காவல் ஆணையர் கிரி, அம்பத்தூர் சட்டம் -ஒழுங்கு ஆய்வாளர் ராமசாமி மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் அம்பத்தூரின் முக்கிய பகுதிகளில் சைக்கிளில் ரோந்து சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்தனர்.

பின்னர் அங்குள்ள ஏ.டி.எம் மையங்களை செங்குன்றம் துணை ஆணையர் மணிவண்ணன் சோதனை செய்து பதிவு ஏட்டில் கையொப்பமிட்டார். திரையரங்க பகுதிகளின் வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள், கார் மற்றும் இதர வாகனங்கள் அனைத்தும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுப்பப்பட்டன. வாகனங்களில் உரிய ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் போன்றவை சரிபார்க்கப்பட்டன. ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகனம், தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகள், உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் என அனைத்தும் சோதனை செய்யப்பட்டு போக்குவரத்து காவலர்களால் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதுபோல் ரோந்து பணிகள் அடிக்கடி நடைபெற வேண்டுமென பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போலீசாரை ஊக்கப்படுத்த…
ஆவடி காவல் ஆணையரக இணை ஆணையர் விஜயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: ஆவடி காவல் ஆணையரக ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் அறிவுரையின்படி ஆரம்பிக்கப்பட்டது ‘அக்கம் பக்கம் கண்காணிப்பு’ என்ற திட்டம். ஒவ்வொரு காவல் நிலையத்தின் எல்லைகளில் இருக்கிற குடியிருப்பு பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்பு, விரிவாக்க பகுதிகளில் போலீசார் சைக்கிளில் ரோந்துசென்று அந்த பகுதி மக்களிடம் கலந்துரையாடி, குற்றங்கள் நடக்காமல் இருப்பதற்கு கண்டறிவதற்கான நடவடிக்கை. குறிப்பாக பொது இடங்களில் மது அருந்துவது, போதைப்பொருட்கள் நடமாட்டம், பெண்கள் பாதுகாப்பு, மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு, தனியாக வசிக்கும் முதியவர் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டு, குற்றங்கள் நடக்காத பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோடைகாலத்தில் பலர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விடுவதால், பூட்டிய வீட்டில் குற்றச் சம்பவங்கள் நடைபெறும் என்பதால் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மக்களுடன் போலீசார் இணைந்து குற்றச் செயல்கள் நடைபெறாமல் இருக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் இரவு நேரங்களில் பணியில் ஈடுபட்டு வரும் போலீசாரை ஊக்கப்படுத்தும் வகையில் காவல் துறை உயர் அதிகாரிகளுடன் சைக்கிளில் சென்று ரோந்து மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளோம். கோடைகாலத்தில் போக்குவரத்து போலீசாருக்கு நீர், மோர் வழங்கப்பட்டு வருகிறது. போலீசாரின் பிரச்னைகள், தேவைகள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இந்த சைக்கிள் ரோந்து மற்றும் ஆய்வின் போது இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post இணை, துணை ஆணையர்கள் தலைமையில் போரூர், அம்பத்தூர் பகுதிகளில் போலீசார் தீவிர சைக்கிள் ரோந்து:  குற்றங்களை தடுக்க அதிரடி  வாகனங்கள் தீவிர சோதனை appeared first on Dinakaran.

Tags : Borur ,Ambattur ,Chennai ,
× RELATED சென்னையில் அடுக்குமாடி...