×

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு

சென்னை: கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய இறப்புகள் குறித்தும், தமிழ்நாட்டில் கள்ளச்சாராயத் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்தும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அரசு முதன்மைச் செயலாளர் அமுதா, காவல் துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு, காவல் துறை கூடுதல் இயக்குநர் சங்கர், மதுவிலக்கு அமலாக்கத் துறை கூடுதல் இயக்குநர் மகேஷ்குமார் அகர்வால், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையர் மதிவாணன், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண் இயக்குநர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: மாநில அளவில் மதுவிலக்கு தொடர்பாக தகவல் அளிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 10581 பயன்பாட்டில் உள்ளதை, மக்களிடையே பிரபலப்படுத்தி, ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மதுவிலக்கு அமலாக்கத்துறை ஆகியோரின் வாட்ஸ் அப் எண்களை அறிவிக்க வேண்டும். அதன்மூலம் பெறப்படும் புகார்களை கூடுதல் காவல் துறை இயக்குநர் (மதுவிலக்கு அமலாக்கம்) அதனை கண்காணித்து உடனுக்குடன் எடுக்கும் நடவடிக்கையை உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பான அறிக்கையை, ஒவ்வொரு வாரமும் திங்கள்கிழமையன்று உள்துறைச் செயலாளரின் மூலம் முதல்வர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் தடுப்பு சம்பந்தமாக, மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், மாவட்ட அளவில் ஒவ்வொரு திங்கட்கிழமையும், மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு அதில், காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் (டாஸ்மாக்) மாவட்ட மேலாளர் ஆகியோரைக் கொண்டு நடத்த வேண்டும். இதுகுறித்து, தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு தக்க அறிவுரைகளை வழங்கிட வேண்டும். பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளிகள், கல்லூரிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் சுயஉதவிக்குழு மகளிரைக் கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மேலும், தொழிற்சாலைகளில். எரிசாராயம் மற்றும் மெத்தனால் பயன்பாட்டைக் கண்காணித்து, அது விஷச் சாராயம் காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படாமல் இருப்பதை, காவல்துறை மற்றும் உதவி ஆணையர் (கலால்) கண்காணித்திட வேண்டும். அதுமட்டுமின்றி மாநிலத்தின் எல்லைப் பகுதிகளில், கடலோர மற்றும் மலைப்பகுதி மாவட்டங்களில், மாவட்ட அளவிலான மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் சிறப்பாகச் செயல்படும் உயரதிகாரிகளை நியமிக்க வேண்டும். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திட அரசின் பல்வேறு வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் பயன்பெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திட வேண்டும்., இதனை உள்துறைச் செயலாளர் கண்காணிக்க வேண்டும்.

கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம் – ஒழுங்குப் பிரச்னைகள் குறித்து ஒவ்வொரு மாதமும், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்களின் மாதாந்திரக் கூட்டம் நடத்த வேண்டும். இந்த கூட்டத்தில் காவல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முதல்வரின் அலுவலகத்துக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதேபோல, காவல் துறை அலுவலர்கள், தங்களது முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பினை பெறும்வகையில் சிறப்பாகச் செயல்பட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

The post கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,Chennai ,M.K.Stalin ,Dinakaran ,
× RELATED அரசு வேலைக்கு இருக்கும் மதிப்பு...