×

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு

புதுடெல்லி: ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்குகிறது. ஜல்லிக்கட்டு, கம்பாலா உள்ளிட்ட மாடுகளை வைத்து நடத்தப்படும் விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கும் வகையில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வில் ஏழு நாட்களாக விரிவாக விசாரிக்கப்பட்டது.
இதில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுகிறது சாதுவான விலங்கான காளை மாடுகள் வற்புறுத்தி இந்த போட்டிகளில் கலந்து கொள்ள வைக்கப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் கடுமையான விதிமுறை மீறல்கள் நடைபெறுகிறது. உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை பீட்டா உள்ளிட்ட விலங்குகள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் முன் வைத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசுமற்றும் எதிர்மனுதாரர்கள்,’ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் கலாசாரம், பாரம்பரியம் சார்ந்த நிகழ்வு. இறைவழிபாடு, கொண்டாட்டம் என பல்வேறு அம்சங்கள் கொண்டது. ஜல்லிக்கட்டு மீது தடை விதிக்க நீதிமன்றங்களால் முடியாது. தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துள்ள நிலையில் விலங்குகள் நல அமைப்புகளின் மனுக்களை விசாரிக்க கூடாது.

ஜல்லிக்கட்டு என்பது அனைத்து விதிமுறைகளும் சரியாக வகுக்கப்பட்டு எந்த விதமான சமரசமும் இல்லாமல் நடத்தப்படுகிறது. காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை. அதனால் பீட்டா அமைப்பின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த டிசம்பர் 8ம் தேதி ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி கே எம் ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்க உள்ளது.

The post ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Jallikatu ,New Delhi ,Jallikattu ,Jallikadu ,Dinakaran ,
× RELATED மனைவியின் சீதனம் கணவருக்கு உரிமையில்லை: உச்சநீதிமன்றம் உத்தரவு