- அமைச்சர்
- செந்தில் பாலாஜி
- மின்சார வாரியத் தலைமை அலுவலகம்
- சென்னை
- மின்சாரம், தடை மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள்
சென்னை: மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் அதிகரித்து வரும் மின் தேவையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இன்று சென்னை மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் சிறப்பு ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
இன்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை மற்றும் இதர மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்து தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் செயற்பொறியாளர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ராஜேஷ் லக்கானி, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகம் மற்றும் அனைத்து இயக்குநர்கள், தொடர்புடைய தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த சில நாட்களாக கோடை வெப்பம் அதிகரித்ததின் காரணமாக தமிழ்நாட்டில் மின் தேவையின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கடந்த 10 வருடங்களில் இல்லாத அதிக அளவாக சென்னையில் மட்டும் நேற்று (16.05.2023) 4,016 மெகாவாட்டாக மின் பயன்பாடு அதிகரித்தது. இது கடந்த 2020-2021 ஆம் ஆண்டில் பதிவான 3,127 மெகாவாட்டை விட 889 மெகாவாட் அதிகமாகும் (28.42%). அதேபோல், சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் நுகர்வோர் உபயோகித்த மின்சாரத்தின் அளவும் 16.05.2023 அன்று 90.34 மில்லியன் யூனிட்டுகளாக அதிகரித்தது. இது கடந்த 2020-2021 ஆம் ஆண்டு பதிவான 76.04 மில்லியன் யூனிட்டுகளை விட 14.30 மில்லியன் யூனிட்டுகள் அதிகமாகும் (18.80%).
ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மின் தேவையானது கடந்த 2020-2021-ல் 16,483 மெகவாட்டாக இருந்தது. இது தற்போது அதிகரித்து 19,387 மெகவாட்டாக 20.04.2023 அன்று பதிவானது. இது 2,904 மெகாவாட் அதிகம். இவ்வாறு தொடர்ந்து மின்பளு அதிகரித்து வரும் நிலையிலும் தமிழ்நாடு மின் தொடரமைப்பு மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் உட்கட்டமைப்பு இதனை எதிர்கொள்ளும் வகையில் உள்ளது என்று மின்துறை அமைச்சர் தெரிவித்தார்.
ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற மண்டலத் தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் அனைவரும் தங்களது மண்டலம்/மின் பகிர்மான வட்டத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை கருத்தில் கொண்டு எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறித்து உரிய முறையில் ஆய்வு செய்து தகுந்த திட்ட வரைவு தயாரித்து விரைந்து அளிக்குமாறு அமைச்சர் உத்தரவிட்டார்.
மேலும், அனைத்து பொறியாளர்களும் பொதுமக்களிடமிருந்து மின் தடங்கல் பற்றி புகார் வந்தாலும் உடனுக்குடன் அதன் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் அனைத்து அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார்.
நாளுக்குநாள் அதிகரித்து வரும், மின்தேவையை எதிர்கொள்ள சென்னையில் மட்டும் புதிய 400 கி.வோ. துணை மின் நிலையம் உட்பட 13 துணை மின் நிலையங்கள் புதியதாக நிறுவப்பட்டுள்ளன. 3,000 கி.மீ. தூரத்திற்கு. மேல்நிலை மின்கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்பட்டுள்ளன. 4,749 வளைய சுற்றுத்தர அமைப்புகள் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் புதியதாக நிறுவப்பட்டுள்ளன.
மேலும், புதியதாக 3,447 மின் விநியோக மின்மாற்றிகள் 2022-2023-ம் ஆண்டில் சென்னையில் நிறுவப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 40,020 மின்மாற்றிகள் தமிழகமெங்கும் நிறுவப்பட்டிருக்கின்றன. இவை தவிர்த்து, எதிர்வரும் மின் தேவையை எதிர்கொள்ள நடப்பாண்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கும் மேலும், புதிய மின்மாற்றிகள் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு கோடை காலத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக அனைத்து துணை மின் நிலையங்களிலும் வருகின்ற 31.05.2023 வரை மின்தடை எதுவும் எடுக்க வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் ஏற்படும் மின் தடங்கலை உடனுக்குடன் சரி செய்வதற்கு உரிய பணியாளர்களுடன் தயராக இருக்குமாறு அனைத்து பொறியாளர்களுக்கும் அமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மின் தடங்கல் சம்பந்தமாக பெறப்படும் புகார்கள் மற்றும் மின்னகம் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்தின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி உடனுக்குடன் சரி செய்து மக்கள் அளித்த புகார்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்று அலுவலர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார். பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“உயர் அதிகாரிகள் குறிப்பாக தலைமை பொறியாளர்கள், மேற்பார்வை பொறியாளர்கள் மற்றும் செயற்பொறியாளர்கள் மின் விநியோகம் குறித்த ஆய்வு கூட்டம் மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் அவர்கள் முன்னிலையில் மிக சிறப்பாக நடந்து முடிந்திருக்கின்றது. குறிப்பாக இந்த கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்குவது குறித்த இந்த ஆய்வு கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளும் அறிவுரைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன.
சில பத்திரிக்கைகள், சில தொலைக்காட்சிகளில் மின் விநியோகம் குறித்து சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அந்த கருத்துக்களின் உண்மை தன்மைகளை இந்நேரத்தில் பதிவிடுவதை நாங்கள் கடமையாக நினைக்கிறோம். குறிப்பாக ஒட்டு மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் மின் தேவை என்பது கடந்த இரண்டு ஆண்டுகளில் மிக அதிகமாக ஏற்பட்டிருக்கிறது.
2020-2021ல் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை எவ்வளவு என்று பார்த்தால் 16,481 மெகாவாட்டாக இருந்தது 2020-2021ல், அதுவே இப்போது 2023-2024ல் இந்த வருடம் கணக்கு பார்க்கும் போது ஏப்ரல், மே மாதத்தில் 45 நாட்களில் கணக்கெடுத்துப் பார்த்தால் தமிழ்நாட்டின் உச்சபட்ச மின் தேவை என்பது 19,387 மெகாவாட் அதிகரித்துள்ளது. ஏறத்தாழ, கணக்கெடுக்கும்போது 3,000 மெகாவாட் அளவிற்கு தமிழ்நாடு முழுவதும் உட்சப்பட்ச மின் நுகர்வு அதிகரித்துள்ளது. அதேபோல, ஒரு நாள் சராசரி எடுத்துப் பார்த்தால் சென்னையில் 431 மில்லியன் அளவிற்கு இந்த உச்சபட்ச மின் தேவை அதிகரித்துள்ளது.
அதுவே, கடந்த காலங்களில் முந்தைய ஆட்சியில் 2019-2020ல் 369 மில்லியன் யூனிட் இருந்தது. இப்போது 423 மில்லியன் யூனிட்டாக உயர்ந்திருக்கிறது. இவ்வளவு உயர்ந்தாலும் கூட எந்தவொரு பாதிப்பும் இல்லாமல் சீரான மின் விநியோகம் தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டிருக்கின்றன, வழங்கப்பட்டும் வருகின்றன. அதற்கு காரணம் தமிழ்நாட்டினுடைய ஒப்பற்ற முதலமைச்சர் மாண்புமிகு தளபதி அவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை, ஆய்வு கூட்டங்கள், கோடைக்காலத்திற்கு எது தேவையோ, அதை கோடை காலம் வருவதற்கு முன்னதாகவே குறிப்பாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கணக்கிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டு அதற்கான மின் கொள்முதல் செய்வதன் மூலமாக, எக்சேஞ்சில் வாங்கியதற்கும், நாம் டெண்டர் மூலம் வாங்குவதற்கும் வித்தியாசம் ஏறத்தாழ, 1,312 கோடி அளவிற்கு மின்சார வாரியத்திற்கான சேமிப்புகள் வரப்பெற்றது. இது குறித்து உங்களிடம் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன், சட்டமன்றத்திலும் பேசப்பட்டிருக்கின்றன.
தமிழ்நாடு முழுவதும் எந்தவொரு பாதிப்பும் இல்லாத அளவிற்கு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக ஒரு சில பகுதிகளில் சென்னையின் தேவை என்பது ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் தேவையை விட மிக கூடுதலாக அதிகரித்து இருக்கிறது. ஆகையால், அதில் சிறப்பு கவனங்கள் செலுத்த வேண்டும் என்று இந்த ஆய்வு கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது. சென்னையை பொறுத்தவரைக்கும்
2019-2020ல் உச்சபட்ச மின் தேவை 3,738 மெகாவாட் அளவிற்கு இருந்திருக்கிறது. அதுவே 2020-2021ல் 3,127 மெகாவாட்டாக இருந்தது, இப்போது சென்னையை எடுத்துக்கொண்டால் 4,016 மெகாவாட்டாக உயர்திருக்கின்றன. சென்னையினுடைய தேவையை 2020-2021ல் கணக்கில் எடுத்துக்கொண்டால் 66 மில்லியன் யூனிட் அளவு இருந்தது, இப்போது இந்தாண்டு பார்த்தால் 90 மில்லியன் யூனிட் அளவிற்கு உயர்ந்திருக்கிறது. ஏறத்தாழ, மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு உயர்திருக்கின்றன. அந்த உயர்வு ஏற்பட்டாலும்கூட, மிக சிறப்பான பராமரிப்பு பணிகள் இந்த இரண்டு ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. சென்னையில் மட்டும் இந்த இரண்டு வருடங்களில் 4,749 RMU புதிதாக நிறுவப்பட்டு முதலமைச்சரின் திருக்கரங்களாலும், அதேபோல இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரின் திருக்கரங்களாலும் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
சென்னையில் மட்டும் புதிதாக 3,447 மின்மாற்றிகள் நிறுவப்பட்டுள்ளது. 13 துணைமின் நிலையங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன. இப்படி கட்டமைப்புகளை இரண்டு ஆண்டுகளில் மிக வேகமாக போர்க்கால அடிப்படையில் வலுப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த அதிகரிக்கப்பட்ட சென்னையினுடைய மின் தேவைகள், வரக்கூடிய ஆண்டுகளில் கணக்கிடப்பட்டு இன்னும் என்னென்ன பணிகள் விநியோகத்திற்காக கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும் என்றும், பட்டியலை தயார் செய்வதற்கு அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
குறிப்பிட்ட அலுவலகங்கலிருந்து தலைமை அலுவலகத்திற்கு வரப்பெற்றுருக்கின்றன. குறிப்பாக, நம் சென்னையை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டியது நாங்கள் இந்த ஆய்வுக்கூட்டத்திலேயே மதிப்பிற்குரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனருடன் சேர்ந்து பேசியபொழுது, நாங்கள் துறையினுடைய அதிகாரிகளிடத்தில் சென்னையில், பல ஆண்டுகளுக்கு முன்பாக நிறுவப்பட்ட கேபிள்களின் திறன் என்பது அதிகரித்திருக்ககூடிய மின் தேவைக்கு ஏற்ப இல்லாமல் பழைய கட்டமைப்பில் இருப்பதால், அதனுடைய திறனை மேம்படுத்த புதிய கேபிள் அமைக்ககூடிய பணிகள் மேற்கொள்ளகூடிய கட்டாயத்தில் மின்சார வாரியம் இருக்கிறது. எனவே, அதை கவனத்தில் கொண்டு மிக விரைவாக அமைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு, அது குறித்து எந்தெந்த இடங்களில் தேவை என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும், அது குறித்து உடனடியாக ஒரு வார காலத்திற்குள்ளாக தலைமை இடத்திற்கு அதற்குரிய கருத்துருக்களை அனுப்பு வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எனவே, சென்னையைப் பொறுத்தவரை வரக்கூடிய ஆண்டுகளில் இந்த மின் விநியோகத்தினுடைய தேவை அதிகரித்தாலும்கூட எந்தவித தடையும் இல்லாமல், வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மின் தடை என்பது நிர்வாகத்தின் சார்பில் பாரமரிப்பு பணிகளுக்காக எடுத்துக்கொள்ளப்படுவதோ அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் கேபிள் பாதிப்பு இருந்தால் பாதிப்புகள் ஏற்பட்டு அதனால் அதை உடனடியாக சரிசெய்வது மின் தடை ஆகும். இதை இரண்டையும் ஒப்பிட்டு பார்த்து செய்திகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும். சென்னையாக இருந்தாலும் சரி, தமிழ்நாடாக இருந்தாலும் சரி மிக சிறப்பாக இரண்டு ஆண்டுகளில் முதலமைச்சரின் வழிகாட்டுதலால் கடந்த ஆண்டுகளை விட இந்தாண்டு வரக்கூடிய புகார்கள் குறித்த அழைப்புகளும் பாதி அளவிற்கு மேல் குறைந்திருக்கின்றன. அதையும் முழுவதுமாக குறைத்திட வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகின்றோம்.
சென்னையில் நேற்று முன்தினம் மின் தடை புகார்கள் அதிகமாக இருந்தது, நேற்று அதில் பாதி அளவு குறைக்கப்பட்டுள்ளது. இன்று அதை முழுவதுமாக குறைத்திட வேண்டும் என்று இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. எந்தெந்த இடங்களில் Over Load இருக்கிறதோ அதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதையும் சரிசெய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தாண்டு மின் தேவைகளுக்கு, 3 மாதத்திற்கான தேவைகளை டெண்டர் மூலம் நாம் கொள்முதல் செய்து விடுகிறோம். அடுத்த ஆண்டுகளுக்கு பார்த்தோமேயானால் வடசென்னை அனல் மின் நிலையம் நிலை 3ல் புதிய யூனிட்டுகள் உற்பத்தியை தொடங்கும் போது நம் தேவையை நம்மால் பூர்த்தி செய்ய முடியும்.
மின்சார வாரியத்தில் ஏற்படுகிற பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்யவேண்டும், முந்தைய காலங்களைப் போல் அல்லாமல் கூடுதல் மின் பளு காரணமாக சில இடங்களில் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்து வருகிறோம். நேற்று குறிப்பிட்ட 5 அல்லது 6 இடங்களில் கேபிள் பழுது காரணமாக மின் தடை ஏற்பட்டதையும் நேற்றிரவே சரிசெய்யப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுவிட்டது. மாநகராட்சியின் மழை நீர் வடிகால் பணிகளின் போது சில இடங்களில் புதைவடங்களில் பழுது ஏற்படுவதால் மின் தடை ஏற்படுகிறது. அதையும் உடனுக்குடன் மற்றொரு பீடர் வழியாக சில நிமிடங்களில் மாற்றி வழங்கப்பட்டு வருகிறது. சமுக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்ட இடங்களிலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுத்து மின் தடை சரிசெய்யப்பட்டு வருகிறது.
நேற்று கூட ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சகம், தமிழக முதல்வருக்கு எழுதிய பாராட்டுக் கடிதத்தில் தேசிய அளவில் இதற்கு முந்தைய 2018-2019ஆம் ஆண்டில் ஊரகப் பகுதிகளுக்கு வழங்கப்படும் மின் விநியோகம் நாளொன்றுக்கு 20 மணி நேரம் 10 நிமிடங்களாக வழங்கப்பட்டு வந்த நிலையில் 2021-2022ஆம் ஆண்டில் நாளொன்றுக்கு 22 மணி நேரம் 15 நிமிடங்களாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டி தனது பாராட்டை தெரிவித்துள்ளது.
கடந்த ஆட்சியில் மின் மிகை மாநிலமாக இருந்ததாக குறிப்பிடுகிறார்கள். அப்படி இருந்திருந்தால் ஏன் 4.5 இலட்சம் விவசாய மின் இணைப்புக்காக விவசாயிகள் காத்திருந்தனர். தற்போது மாண்புமிகு தளபதி அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற பின் 1,50 இலட்சம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த ஆண்டும் 50,000 இலவச விவசாய மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தற்போது, மின் உற்பத்தி திட்டங்களை அதிகரித்து மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுத்து முடிக்காத பணிகளை முடித்து வருகிறோம். சர்க்கரை ஆலைகளில் இணைமின் உற்பத்தி நிலையங்களுக்கான பணிகள் குறித்த காலத்தில் முடிக்காததால் ரூபாய் 1,200 கோடி மதிப்பீட்டிற்கு கூடுதலாக வட்டி மட்டும் 1,300 கோடி செலுத்தி இருக்கிறோம். ரூபாய் 1,200 கோடி திட்ட மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட திட்ட மதிப்பீடு தற்போது 2,500 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த கோடை காலத்தில் எவ்வளவு மின் தேவை அதிகரித்தாலும் அதை சமாளிக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மின்சார வாரியம் எடுத்துள்ளது. இந்தியாவிலுள்ள ஒரு மாநிலத்தின் மின் தேவையை விட அதிக மின் தேவை சென்னையில் மட்டும் பதிவாகிறது. அதையும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது” என மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பின்னர், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் 24 மணி நேர மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தில் ஆய்வு மேற்கொணடார். பின்னர், சென்னை, ஆர்.கே.நகர், கே.வி.பி.தோட்டம் பகுதியில் கேபிள் பழுது ஏற்பட்டு, சரி செய்யப்பட்ட இடத்தினை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். உடன் மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, இயக்குநர்/பகிர்மானம் மா.சிவலிங்கராஜன் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post மின் தேவையை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு appeared first on Dinakaran.
