×

நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு: நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை

நாட்றம்பள்ளி: நாட்றம்பள்ளி அருகே நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்ெகாலை செய்துகொண்டது அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளாளனூரை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் பரமேஸ்வரன் (17). அண்மையில் வெளியான பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்ற இவர், கடந்த வாரம் நடந்த நீட் தேர்வை எழுதியிருந்தார். ஆனால் தேர்வு எழுதிய நாளில் இருந்து தனது பெற்றோர், நண்பர்களிடம், தான் எழுதிய நீட் தேர்வில் மிக குறைந்த மதிப்பெண்கள்தான் கிடைக்கும் எனக் கூறி வேதனை தெரிவித்துவந்துள்ளதாக தெரிகிறது.

இதனால் அவரை பெற்றோர் மற்றும் நண்பர்கள் சமாதானம் செய்துள்ளனர். இந்தநிலையில் நேற்றிரவு வீட்டு மாடியில் உள்ள அறைக்கு பரமேஸ்வரன் சென்றுள்ளார். நீண்டநேரமாக வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர் மாடிக்கு சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் மின்விசிறியில் தூக்கிட்ட நிலையில் பரமேஸ்வரன் கிடப்பது பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மாணவனை மீட்டு நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பரமேஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்றம்பள்ளி போலீசார் சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post நாட்றம்பள்ளி அருகே பரபரப்பு: நீட் தேர்வு எழுதிய மாணவன் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Nadrampalli ,Nadramballi ,NEET ,Thirupathur District Nadrampalli ,
× RELATED சாலை விபத்தில் படுகாயம் அடைந்த...