×

திருவொற்றியூர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாப பலி

திருவொற்றியூர், மே 17: திருவொற்றியூர் கடலில் குளித்தபோது கல்லூரி மாணவர்கள் 3 பேர் அலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. திருவொற்றியூர் பி.சதானந்தபுரத்தை சேர்ந்தவர் ஹரிஷ் (16). தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது அண்ணன் சந்துரு (20), அங்குள்ள கல்லூரியில் படித்து வருகிறார். இவர்களுக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவன் காந்த் (19) என்பவர் நண்பர். நேற்று மதியம் இவர்கள் மூவரும் விளையாடுவதற்காக திருவொற்றியூர் தாங்கல் அருகே உள்ள கடற்கரைக்கு வந்துள்ளனர். பின்னர் வெயிலின் தாக்கத்தால் 3 பேரும் கடலில் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ராட்சத அலையில் 3 பேரும் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர்.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு, கடற்கரையில் இருந்தவர்கள், மீனவர்களின் உதவியுடன் கடலுக்குள் இறங்கி, ஹரிஷ் மற்றும் காந்த் ஆகிய இருவரையும் மயங்கிய நிலையில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அலையில் சிக்கி மாயமான பள்ளி மாணவன் சந்துருவை திருவொற்றியூர் தீயணைப்பு வீரர்கள் சிறப்பு படகு மூலம் தேடினர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை.

இதனையடுத்து திருவொற்றியூர் போலீசாருடன் இணைந்து தீயணைப்புத் துறையினர் மற்றும் கடலோரக் காவல் படையினர் தற்காலிக மின்விளக்குகள் அமைத்து கடலில் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காதர்மொய்தீன் வழக்குப்பதிவு செய்து உயிரிழந்த இருவரின் உடலையும் பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். கடல் அலையில் சிக்கி 3 மாணவர்கள் உயிரிழந்த இந்த சம்பவம் மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post திருவொற்றியூர் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி 3 மாணவர்கள் பரிதாப பலி appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur sea ,Tiruvottiyur ,
× RELATED குரு பெயர்ச்சியை முன்னிட்டு...