×

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக்கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓபிஎஸ் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதன்படி, மார்ச் 28ம் தேதி நீதிபதி குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார்.ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 4 இடைக்கால மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. மேலும் பொதுக்குழு மற்றும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தீர்ப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதன்படி, பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்க கோரி அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டது. அதனடிப்படையில், இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக கடந்தாண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரித்து உத்தரவிட்டது.

அதன்படி, அதிமுகவின் சட்டவிதிகள் திருத்தம், நிர்வாகிகள் மாற்றம் போன்றவற்றை ஏற்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும், அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் கட்சியின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இந்நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

The post எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Edappadi Palaniswami ,Chennai ,General Secretary ,Dinakaran ,
× RELATED அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள்: எடப்பாடி வேண்டுகோள்